ஏ.இ.இ.ஓ., பணியிடம் காலி; ஆசிரியர்கள் அலைக்கழிப்பு
தாண்டிக்குடி: கொடைக்கானலில் காலியாக உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலர் (ஏ.இ.இ.ஓ.,) பணியிடத்தால் ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். இங்கு உதவி தொடக்க கல்வி அலுவலர், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிடம் கடந்த சில மாதங்களாக காலியாக உள்ளது. நிலக்கோட்டை, ஆத்தூர் அலுவலர்கள் கூடுதலாக கவனிக்கின்றனர். கொடைக்கானல் கீழ்மலை, மேல்மலை பகுதியில் ஏராளமான துவக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளின் ஆசிரியர்கள் பல்வேறு அலுவல் பணிக்காக கொடைக்கானல் வருகின்றனர். கூடுதல் பொறுப்பில் உள்ளவர்கள் இரு பகுதியை கண்காணிப்பதால் பணிச்சுமையில் அங்கும், இங்கும் பந்தாடப்படுகின்றனர். இந்நிலை ஆசிரியர்களையும் பாதிக்கிறது. இன்று நடக்கும் காலாண்டு தேர்வு வினாத்தாள் பெற நேற்று உதவி தொடக்க கல்வி அலுவலகம் வந்த ஆசிரியர்களுக்கு மாலை வரை வினாத்தாள் கிடைக்காது ஏமாற்றத்துடன் திரும்பினர். இதுபோன்று அலுவல் நிமித்தமாக வரும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவது தொடர்கிறது. இதை தவிர்க்க காலியாக உள்ள இரு பணியிடங்களையும் நிரப்ப மாவட்ட கல்வி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.