கிராமத்துக்கு சோலார் வசதி; மாணவர்கள் சாதனை
பெங்களூரு: பரிசு பெறுவதை விட, அதை மற்றவர்களுக்கு அளிப்பது மிகுந்த மகிழ்ச்சியை தரும் என்பதை உணர்ந்த, பெங்களூரு பள்ளி மாணவர்கள் சிலர், ஒரு கிராமத்துக்கே பரிசு வழங்கி உள்ளனர். கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்., அரசு உள்ளது. இம்மாநிலத்தின் தலைநகர் பெங்களூரில் உள்ள பள்ளியில், பிளஸ் 1 வகுப்பில் படிக்கும் நான்கு மாணவர்களும், சட்டக்கல்லுாரி மாணவர் ஒருவரும் இணைந்து, தீபம் என்ற அமைப்பை துவக்கினர். இந்த அமைப்பின் மூலம், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே நிதி திரட்டி, தீபாவளியின் போது, ஏழைகளுக்கு உடைகள் மற்றும் பணம் கொடுத்து உதவினர். தற்போது, கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி, தெரு விளக்கு வசதியில்லாத, கயிவாரா என்ற கிராமத்துக்கு, 70 மின்கம்பங்களை அமைத்து, 140 சோலார் மின் விளக்குகளை பொருத்தி உள்ளனர். இதனால், அந்த கிராமம் இரவில் மின் வெளிச்சத்தை பெற்றுள்ளது. இனிவரும் ஒவ்வொரு பண்டிகையின் போதும், கிராமங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரப்போவதாகவும், இவர்கள் கூறிஉள்ளனர்.