அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலைப் பாடம்!
புதுச்சேரி: புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லுாரியில், முதுகலை பாடப்பிரிவுகள் விரைவில் கொண்டு வரப்படும் என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில், விளையாட்டு விழா நேற்று நடந்தது. கல்லுாரி இயக்குநர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். டாக்டர் உதயசங்கர் வரவேற்றார். முதல்வர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து பேசியதாவது: அரசு மருத்துவ கல்லூரியின் விளையாட்டுத் திடல் அடுத்த ஆண்டு அனைத்து விளையாட்டுகளும் விளையாடும் வகையில் முழுமையாக மாற்றப்படும். தற்போது இந்த கல்லுாரி மாணவர்கள் மட்டும் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகள், வரும் ஆண்டுகளில் இந்திய அளவில் மருத்துவ மாணவர்கள் பங்கேற்கும் வகையில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். கல்லுாரியில் கட்டடம் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்கள் வாங்க போதுமான நிதி அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்லுாரியில் உலக தரம் வாய்ந்த அறுவை சிகிச்சை அரங்கம் அமைக்கப்படுகிறது.சென்னையில் உள்ள புகழ் பெற்ற மருத்துவமனையின் டாக்டர்களை கொண்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்து வருகிறது. அதே போன்று இக்கல்லுாரியிலும் பிரபல டாக்டர்களை கொண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம், இங்கு படிக்கும் மாணவர்களும் சிறந்த பயிற்சி எடுத்துக்கொள்ள முடியும். புதுச்சேரியில் சிறந்த மருத்துவக் கல்லுாரி என்ற பெயரை, கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி பெற வேண்டும். அது மாணவர்களாகிய உங்கள் கையில் தான் உள்ளது. இக்கல்லுாரியில் முதுகலை பாடப்பிரிவுகள் விரைவில் துவங்க அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மருத்துவக்கல்லுாரி துவங்கப்பட்டு முதல் பட்டமளிப்பு விழா ஓரிரு நாட்களில் நடக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இவ்வாறு ரங்கசாமி பேசினார்.