ஸ்டாலின், மயில்சாமி, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு டாக்டர் பட்டம்
விழாவில், துணை முதல்வர் ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை ஆகிய மூவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா, பட்டங்களை வழங்கினார். பட்டமளிப்பு விழா உரையாற்றிய அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் பேசியதாவது:நாட்டின் முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவனமாக வளர வேண்டும் என 30 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகம், இணைப்பு பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டதால் நம்பிக்கையை இழந்தது. தற்போது தமிழக அரசு முயற்சியால், அப்பல்கலைக்கழகம் மீண்டும் பழைய நிலைக்கு மாறும் அறிகுறி தோன்றியுள்ளது. அண்ணாதுரையின் பெயரை தாங்கி நிற்கும் பல்கலைக்கழகங்களின் மதிப்பும், மரியாதையும் காக்கப்பட வேண்டும். அண்ணா பெயரிலான பல்கலைக்கழகங்கள் ஒழுக்கக்குறைவான செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தால், அதை சமுதாயம் இரக்கமற்ற தன்மையுடன் எதிர்க்க வேண்டும். பல்கலைக்கழகங்களில் மூன்று விஷயங்கள் முக்கியமானவை. சிண்டிகேட் உறுப்பினர்கள் நியமனம், துணைவேந்தர்கள் தேர்வு, ஆசிரியர்களின் பதவி உயர்வு ஆகிய மூன்றிலும் அரசியல் தலையீடு இல்லாத தனித்தன்மை காக்கப்பட வேண்டும். பல்கலைக்கழக நடவடிக்கைகள் குறிக்கோள் அடிப்படையிலும், வெளிப்படையாகவும் நடக்க வேண்டும். அத்தகைய பல்கலைக்கழகங்களுக்கு தேவையான நிதி, நிர்வாக உதவியை சமுதாயம் வழங்க வேண்டும். பல்கலைக்கழகம் பொருளாதார அமைப்பு மட்டுமல்ல; சமுதாய சொத்து. இப்பல்கலைக்கழகத்தின் செயல்பாடு நேர்மையற்ற செயல்களால் கறைபடியக் கூடாது. இவ்வாறு அனந்தகிருஷ்ணன் பேசினார். சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் வரவேற்றார். சிறப்புரையாற்றிய, குன்றக்குடி பொன்னம்பல அடிகள், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர், விருது பெற்ற மூவரையும் வாழ்த்திப் பேசினர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில், “தமிழர்களின் நெஞ்சங்களில் இலங்கை போர் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என, நிறைய நிகழ்ச்சிகளை தவிர்த்துவிட்டேன்,” என்றார். சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில், “இன்னும் அதிகமாக செய்யுங்கள் என ஊக்கப்படுத்த இவ்விருது வழங்கப்பட்டதாக கருதுகிறேன்,” என்றார். மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் என பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.