ஐ.ஐ.டி.,யுடன் இணைந்த மெட்ரோ தொழில்நுட்ப படிப்பு
மெட்ரோ ரயில் தொழில்நுட்பத்தை 12 நகரங்களுக்கு விரிவுபடுத்தியிருப்பதால், டில்லி ஐ.ஐ.டி.,யும், மெட்ரோ ரயில் கார்பரேஷனும் இணைந்து மாணவர்களுக்கு பயற்சியளிக்க தொடங்கி இருக்கிறது. இதன் மூலம் மெட்ரோ தொழில்நுட்பம் அறிந்த நிபுணர்களை உருவாக்க முடியும். இந்த ஓராண்டு படிப்பில் மெட்ரோ குறித்த தொழில்நுட்பத்தையும், கட்டுமான மேலாண்மையை பற்றியும் 12 பாடங்கள் இடம்பெறுகின்றன. சிக்னலிங், டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பற்றியும் கற்றுத்தரப்படுவதால், உலகளவிய மெட்ரோ தொழில்நுட்பம் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த படிப்பில் சேரும் மாணவர்களுக்கு மாத உதவித்தொகையாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இது தவிர அரசின் பிற உதவிகளும் கிடைக்கும். இந்த படிப்பில் பயிற்சி வகுப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதால், இந்த துறை எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும். இந்த படிப்பை நிறைவு செய்தவுடன், ஏதாவது ஒரு நகரில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. அங்கு மெட்ரோ சேவைக்கு துணை மேலாளராக நியமிக்கப்படுகிறார். மெட்ரோ ரயில் தொழில்நுட்பத்தில் கட்டுமானம் மற்றும் செயல்பாடு குறித்து அறிந்த பயிற்சி பெற்ற இன்ஜினியர்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைவு. இதனால் டில்லி ஐ.ஐ.டி., டில்லி மெட்ரோவுடன் இணைந்து இளம் இன்ஜினியர்களுக்கு தேவையான பயிற்சி வழங்கி, அவர்களை பணிக்கு அமர்த்திக்கொள்கிறது. படிப்பு முடிந்தவுடன் அவர்கள் கட்டுமானம் தொடர்பான பணியில் ஈடுபடும் வகையில் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் சேர பி.டெக்., அல்லது பி.ஆர்க்., நிறைவு செய்திருக்க வேண்டும். மெட்ரோ ரயில்வேயில் பணிக்கமர்த்தப்பட்டவுடன் அரசின் சலுகைகளுடன் சம்பளமாக மாதம் 11 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.