சாதனையாளர்களுக்கு தினமலர் நாளிதழின் மலர் மகுடம்
சென்னை: தொழில் துறையில் சாதித்த சாதனையாளர்களுக்கு, தினமலர் நாளிதழ் சார்பில், மலர் மகுடம் வழங்கும் விழா, சென்னையில் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவில், 19 சாதனையாளர்களுக்கு மலர் மகுடம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.தினமலர் நாளிதழ் சார்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும், தொழில் துறையில் சாதனை செய்தவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி, மலர் மகுடம் என்ற பெயரில் நடத்தப்படுகிறது. கவுரவிக்கப்படும் சாதனையாளர்களின் வாழ்வியல் அனுபவங்கள், நுாலாக தொகுக்கப்பட்டு வெளியிடப்படுவது, இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.அந்த வகையில், தொழில் துறையில் சாதித்த சென்னையை சேர்ந்த, 19 சாதனையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி, தினமலர் நாளிதழ் சென்னை பதிப்பு சார்பில், சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நேற்று நடந்தது.சாதனையாளர்களாக தேர்வு செய்யப்பட்ட, 19 பேரின் வாழ்வியல் அனுபவங்கள் தொகுக்கப்பட்டு, மலர் மகுடம் - சென்னை செல்வங்கள் என்ற தலைப்பில் நுாலாக வெளியிடப்பட்டது. நுாலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலரும், எம்.பி.,யுமான செல்லக்குமார் பெற்றுக் கொண்டார்.அதைத் தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்ட, 19 சாதனையாளர்களும் அடுத்தடுத்து கவுரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு அமைச்சர் சுப்பிரமணியன், காங்கிரஸ் எம்.பி., செல்லக்குமார் ஆகியோர், மலர் மகுடம் வழங்கி கவுரவித்தனர். ஒவ்வொரு சாதனையாளர் மலர் மகுடம் பெற்ற போதும், அவர்கள் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. இது, அனைவரையும் கவர்ந்தது.தினமலர் நாளிதழ் கோவை பதிப்பு வெளியீட்டாளர் இல.ஆதிமூலம்; புதுச்சேரி பதிப்பு வெளியீட்டாளர் கி.வெங்கட்ராமன்; தினமலர் நாளிதழ் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி; இயக்குனர்கள் ஆ.லட்சுமிபதி; ஆர்.சீனிவாசன் ஆகியோர் சாதனையாளர்களை பாராட்டி பேசினர்.சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற, அமைச்சர் சுப்பிரமணியன், காங்கிரஸ் எம்.பி., செல்லக்குமார் ஆகியோருக்கு, தினமலர் நாளிதழ் கோவை பதிப்பு வெளியீட்டாளர் இல.ஆதிமூலம் நினைவுப்பரிசு வழங்கினார்.நிகழ்ச்சியின் முடிவில், அனைவரும் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். முன்னதாக, தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான, பட்டம் இதழின் பொறுப்பாசிரியர் வெங்கடேசன் வரவேற்றார். ஈரோடு மகேஷ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் துவக்கமாக, அனர்த்தனா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.சாதனையாளர்கள்யார், யார்? ஏ4 மருத்துவமனை இயக்குனர் அருணா அசோக்; திருப்பூர் அனிதா டெக்ஸ்காட் நிர்வாக இயக்குனர் சந்திரசேகர்; பட்ஜெட் ஹவுசிங் அண்ட் பிராப்பர்டிஸ் நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ்குமார்; பிரியதர்ஷினி செல் யூனிவர்ஸ் நிறுவனர் சுரேஷ்குமார்; ராஜன் ஐ கேர் மருத்துவமனை தலைவர் மோகன் ராஜன். ரெமோ கல்வி குழுமத்தின் முதல்வர் ரித்திக் பாலாஜி; சான் அகாடமி குரூப் ஆப் ஸ்கூல்ஸ் நிர்வாக இயக்குனர் அர்ச்சனா; வசந்த் அண்ட் கோ நிர்வாக பங்குதாரர்கள் தமிழ்செல்வி, தங்கமலர், விஜய் வசந்த், வினோத்குமார்; வேர்ல்டுடிரான் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனர் சாய் வினோத். சீயோன் மற்றும் ஆல்வின் குரூப் ஆப் ஸ்கூல்ஸ் தலைவர் விஜயன்; திருவான்மியூர் காட்டன் ஹவுஸ் நிர்வாக இயக்குனர் வேணுகோபால்; டி.ஏ.சி., டெவலப்பர்ஸ் நிர்வாக இயக்குனர் சதீஷ்குமார்; திண்டுக்கல் தலப்பாகட்டி நிர்வாக இயக்குனர் நாகசாமி தனபால்; காஞ்சிபுரம் எஸ்.எம்.சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் மனோகரன் சுப்புராமன். எக்விடாஸ் சிறுநிதி வங்கி நிர்வாக இயக்குனர் பி.என்.வாசுதேவன்; லலிதா ஜுவல்லர்ஸ் மார்ட் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் கிரண்குமார்; மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரித்வி மோகன்தாஸ்; நல்லி குழும தலைவர் நல்லி குப்புசாமி; பூர்விகா தலைமை நிர்வாக அதிகாரி யுவராஜ் ஆகிய சாதனையாளர்கள் மலர் மகுடம் கவுரவம் பெற்றனர்.