உள்ளூர் செய்திகள்

நீதிபதிகள் தேர்வில் மாற்றம்: ஜனாதிபதி வலியுறுத்தல்

நம் நாட்டின் அரசியல் சாசனம், 1949, நவ., 26ல், நியமன பார்லிமென்டால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, நவ., 26ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் சட்ட தினமாக கொண்டாடப்பட்டு வந்தது.மரியாதைகடந்த 2015ல் இருந்து, அரசியல் சாசன தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்றார். அம்பேத்கரின், 7 அடி உயரமுள்ள சிலையை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது: நான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின், பல மத்திய, மாநில பல்கலைகள், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., உள்ளிட்டவற்றுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது மாணவர்களுடன் உரையாற்றியபோது, அவர்கள் தங்களுடைய விருப்பங்களை தெரிவித்தனர். சிலர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக வேண்டும் என்று தெரிவித்தனர். அதுபோல ஒரு சிலர், நீதித் துறையில் பணியாற்ற விருப்பம் தெரிவித்தனர். இது போன்ற திறமையுள்ள இளைஞர்கள் நீதித் துறைக்கு வர வேண்டும். நம் நாடு பன்முகத்தன்மை கொண்டது. அந்த பன்முகத்தன்மை, அரசியல் சாசனத்தின் பாதுகாவலனாக விளங்கும் நீதித் துறையிலும் இருக்க வேண்டும்.தகுதியின் அடிப்படையில், மிகவும் வெளிப்படையாக போட்டியிட்டு, நீதிபதிகள் பதவிக்கு இந்த இளைஞர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்கு, தேசிய அளவில் நீதித்துறை சேவை முறையை உருவாக்க வேண்டும். இதனால், பெண்கள், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் உட்பட, இதுவரை வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கும் நீதிபதிகளாக பணியாற்றும் வாய்ப்பு ஏற்படும். இது குறித்து, நீதித்துறை ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.கட்டுப்பாடுநாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும், நீதிமன்றங்களை அணுகும் வாய்ப்பு கிடைக்கிறதா என்பதை நாம் நம்மிடம் கேட்க வேண்டும். செலவு மற்றும் மொழி, இதற்கு தடையாக இருந்து வந்தன. அதற்கு ஓரளவுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மன்னர்கள் காலத்தில் ஆராய்ச்சி மணி என்பது இருக்கும். மக்கள் நியாயம் கேட்டு அந்த மணியை அடித்தால், மன்னர் விசாரித்து உரிய தீர்ப்பு அளிப்பார். பலமுறை எனக்கு கேள்வி எழுந்தது உண்டு.தொடர்ந்து மணி அடித்து கொண்டிருந்தால், மன்னர்கள் நிம்மதியாக இருக்க முடியுமா? அந்த மணியை அடிக்க வேண்டிய நிலையை உருவாக்காமல் இருப்பதே, சிறந்த நிர்வாகமாகும். மக்களை சார்ந்ததாக நீதித்துறையும் இருக்க வேண்டும். காலனியாதிக்க கட்டுப்பாடுகளை தகர்த்து, நீதித்துறையும் மக்கள் சார்புடையதாக மாற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது: மக்களின் நீதிமன்றமாக உச்ச நீதிமன்றம் செயல்படுகிறது. அதனால், நீதிமன்றங்களை நாடுவதில் மக்களுக்கு, அச்சமோ, தயக்கமோ தேவையில்லை. நீதிமன்றங்களை நாடுவதை தங்களுடைய கடைசி முயற்சியாக பார்க்கக் கூடாது. அரசியல் வேறுபாட்டை களைவதற்கு, ஜனநாயக அமைப்புகளை எப்படி அரசியல் சாசனம் உருவாக்கியுள்ளதோ, அதுபோல, மக்களுக்கான அனைத்து பிரச்னைகளுக்கும் இதில் தீர்வு உள்ளது. இதன்படி பார்த்தால், நாட்டில் உள்ள ஒவ்வொரு நீதிமன்றமும், அரசியல் சாசன நிர்வாகத்தின் ஒரு அமைப்பே. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்