பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
உடுமலை: உடுமலை வட்டார அளவில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டத்தின் சார்பில், வட்டார அளவில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி வகுப்பு குறுமையங்களில் நடந்தது. உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வாளவாடி, உடுக்கம்பாளையம், எலையமுத்துார், ஜல்லிபட்டி, பூலாங்கிணர், ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப்பள்ளிகள், உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேவனுார்புதுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவசக்திகாலனி அரசு உயர்நிலைப்பள்ளி உட்பட பத்து குறுமையங்களில், 126 பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.வட்டாரக் கல்வி அலுவலர்கள் சரவணக்குமார், மனோகரன், ஆறுமுகம், பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் விஜயா பயிற்சிகளை துவக்கி வைத்தனர்.மேலாண்மைக்குழு தலைவர், துணைத்தலைவர், தலைமையாசிரியர், ஆசிரியர் பிரதிநிதி, கல்வியாளர்கள் உட்பட மொத்தமாக 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி வகுப்பு நடந்தது.பயிற்சியில் குழு உறுப்பினர்களின் கடமைகள், பொறுப்புகள், கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம், பள்ளி துணை குழுக்கள் உருவாக்குதல், நம்ம ஸ்கூல் செயலி குறித்து ஆசிரியர் பயிற்றுனர்கள் விளக்கமளித்தனர்.பயிற்சிகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம் பார்வையிட்டார்.