துணைவேந்தர் ஜெகநாதன் மீதான விசாரணைக்கு தடை
சென்னை: முறைகேடு புகாரில் சிக்கிய பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன்; விதிகளை மீறி சொந்தமாக, தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி அமைப்பை துவங்கி, அரசு நிதியை பயன்படுத்தியதாகவும், பல்கலை அதிகாரிகளை வைத்து அமைப்பை இயங்க செய்ததாகவும், துணை வேந்தருக்கு எதிராக, பல்கலை ஊழியர் சங்கத்தினர் புகார் அளித்தனர்.ஜாதி பெயரை குறிப்பிட்டு திட்டியதாக, கிருஷ்ணவேணி, சக்திவேல் ஆகியோரும் புகார் அளித்தனர். புகாரின்படி, கருப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஜெகநாதன் கைது செய்யப்பட்டார்.சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெகநாதனுக்கு, ஏழு நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. இதை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சேலம் போலீஸ் கூடுதல் கமிஷனர் தரப்பில் தாக்கல் செய்த மனு, இன்று (ஜன.,19) விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ஆவணங்களை சரிபார்த்ததில் ஜெகநாதனின் செயல்பாட்டில் குற்றநோக்கம் இருப்பதாக தெரியவில்லை எனக் கூறி வழக்கு விசாரணைக்கு தடை விதித்து, வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.