வைக்கம் விருதுக்கு கர்நாடக எழுத்தாளர் தேர்வு
கர்நாடகா எழுத்தாளருக்கு தமிழக அரசின் வைக்கம் விருது வழங்கப்பட உள்ளது.அரசு அறிவிப்பு:தமிழக எல்லை கடந்து சென்று, சமூக நீதிக்காக போராடிய, ஈ.வெ.ரா.,வை நினைவுகூறும் வகையில், பிற மாநிலங்களில், ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காக பாடுபட்டு, மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு, ஆண்டுதோறும் வைக்கம் விருது வழங்கப்படுகிறது.அதன்படி, 2024ம் ஆண்டுக்கான வைக்கம் விருது, கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் தேவநுார மஹாதேவாவிற்கு வழங்கப்பட உள்ளது. இவர் சிறந்த எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர். மக்களின் மொழியியல் உரிமைகளின் மீதான நிலைப்பாட்டில், அதிக ஈடுபாடு கொண்டவர்.ஜாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக செயல்பட்டவர்; பத்ம ஸ்ரீ மற்றும் சாகித்ய அகாடமி விருதுகள் பெற்றுள்ளார்.வைக்கம் விருது பெறும் அவருக்கு, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டு சான்றிதழ், தங்க முலாம் பூசிய பதக்கம் ஆகியவை வழங்கப்பட உள்ளன. கேரள மாநிலம், வைக்கத்தில் இன்று நடக்கவுள்ள வைக்கம் நினைவகம் திறப்பு விழாவில், இந்த விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கவுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.