உள்ளூர் செய்திகள்

இன்ஜி., தரவரிசை பட்டியல் வெளியீடு தள்ளிப்போகிறது

சென்னை: சி.பி.எஸ்.இ., மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீட்டில் தாமதத்தால், இன்ஜி., தரவரிசை வெளியீடு தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள், ஓ.எஸ்.எம்., எனும் கணினி வழி மதிப்பீடு செய்யப்பட்டது. தேர்வு முடிவில், மாணவர்களின் மதிப்பெண்கள் குறைந்தன. அதற்கு, புதிதாக அமல்படுத்தப்பட்ட மதிப்பீடு முறையே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து, மீண்டும் மறுமதிப்பீடு கோரி, சி.பி.எஸ்.இ., வாரியத்துக்கு பலரும் விண்ணப்பித்தனர். அவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் மீண்டும் நடந்து வருகின்றன. அதன் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் நீடிக்கிறது.இந்த சூழலில், நடப்பாண்டு இன்ஜினியரிங் படிப்புகளுக்கு, சி.பி.எஸ்.இ., மாணவர்கள் 24,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை வரும், 29ம் தேதி வெளியிட, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தயாராக உள்ளது.ஆனால், சி.பி.எஸ்.இ., மறுமதிப்பீட்டு முடிவுகள் வெளியாகாததால், இன்ஜி., தரவரிசை பட்டியல் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக, உயர் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்