எம்.எட்., மாணவர்களுக்கு புதிய தேர்வு அறிமுகம்
சென்னை: கல்வியியல் படிப்பான எம்.எட்., மாணவ மாணவியருக்கு, 'ஸ்வயம்' தேர்வுக்கு மாற்றாக, புதிதாக குழந்தைகள் கட்டாய கல்வி, ஆராய்ச்சி திறன் எனும் புதிய தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கீழ், 5 அரசு கல்வியியல் கல்லுாரிகள், 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகள், 662 சுயநிதி கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லுாரிகளில், பி.எட்., எம்.எட்., படிப்புகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.கல்வியியல் கல்லுாரிகளில், கடந்த 2020 - 21ம் கல்வியாண்டு முதல், எம்.எட்., பட்ட படிப்புக்கும், 2021 - 22ம் கல்வியாண்டு முதல் பி.எட்., பட்ட படிப்புக்கும், 'சாய்ஸ் பேஸ்டு கிரெடிட் சிஸ்டம்' எனும் சி.பி.சி.எஸ்., செமஸ்டர் தேர்வு பாடத்திட்ட முறை அறிமுகம் செய்யப்பட்டது.அதன்படி, பி.எட்., படிக்கும் மாணவ மாணவியர், மத்திய அரசு உத்தரவுப்படி, 'ஸ்வயம் ஆன்லைன்' படிப்பில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. அதற்கான தேர்வு மையங்கள், வெளிமாநிலங்களில் அமைக்கப்பட்டன. அதனால், மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.இதை கருத்தில் கொண்டு, பி.எட்., மாணவர்கள், 'ஸ்வயம்' தேர்வுக்கு மாற்றாக, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை நடத்தும், ஆன்லைன் படிப்பில் ஒன்றை தேர்வு செய்து, தேர்வு எழுதலாம்; யோகா, உடல்நலம் மற்றும் உடற்கல்வி பாடம் சார்ந்து 'ரிக்கார்டு' எழுதலாம்; கல்வியியல் தொழில்நுட்பம் சார்ந்து ரிக்கார்டு எழுதலாம் என, பல்கலை அறிவித்தது.அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் எம்.எட்., மாணவர்களுக்கும், நான்காவது பருவ தேர்வில், 'ஸ்வயம்' தேர்வுக்கு மாற்றாக, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை சார்பில், புதிய தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 'ஆராய்ச்சி திறன் மற்றும் குழந்தைகள் கட்டாய கல்வி' என, இரு தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.இந்த தேர்வில், மொத்தம் ஏழு வினாக்கள் இடம்பெறும். அதில், ஐந்து வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும். ஒவ்வொரு வினாவுக்கும், 5 மதிப்பெண் வழங்கப்படும். இம்மாத இறுதியில், புதிய தேர்வு நடத்தப்பட உள்ளது.