மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள், உயர் கல்வியில் சேர்க்கை பெறும் பொருட்டு, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும். இசைப் பள்ளியில், 3 ஆண்டுகள் படித்து முடித்த மாணவர்கள், இசைக் கல்லுாரிகளில் நேரடியாக பட்டயப்படிப்பில், மூன்றாமாண்டு சேரலாம். இப்பள்ளியில் பாரம்பரிய கலைகளான குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்க பயி ற்சி அளிக்கப்படுகிறது. காலை, 10:00 மணி முதல், மாலை, 04:00 மணி வரை முழு நேரப்பள்ளியில், 13 வயது முதல், 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் சேரலாம். பயிற்சி காலம், 3 ஆண்டுகள். தமிழ்நாடு தேர்வுத்துறையால் தேர்வு நடத்தி அரசு தேர்வுகள் இயக்குனரால் இசைப்பள்ளி தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி கட்டணம் ஏதுமில்லை. சிறப்பு கட்டணமாக ஆண்டிற்கு, 350 ரூபாய் செலுத்த வேண்டும். மாணவ, மாணவியருக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் கல்வி உதவித்தொகை, டவுன் பஸ்களில் சென்றுவர இலவச பஸ் பாஸ் உண்டு.பள்ளியில் சேர விரும்புவோர் உடனடியாக தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், திருமலை நகர், ராமாபுரம், கிருஷ்ணகிரி - 635 115, என்ற முகவரியிலோ, 04343- 234001; 95003 88896 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.