மாணவர்களுக்கு கல்வித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் பத்மஜா செய்திக்குறிப்பு:மத்திய அரசு சார்பில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.அதன்படி நடப்பு கல்வியாண்டில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் https://scholarships.gov.in விண்ணப்பிக்க வேண்டும்.இத்திட்டத்தில் கல்விக்கட்டணம் மற்றும் விடுதி கட்டணமாக ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக 9 மற்றும் 10ம் வகுப்பு 75 ஆயிரம் ரூபாய், பிளஸ் 1, பிளஸ்2 விற்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை மத்திய அரசால் வழங்கப்படுகிறது.குடும்ப ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். 2025 - 26ம் கல்வியாண்டில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று, தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும்.கடந்த நிதியாண்டில் கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்த மாணவர்கள் நடப்பாண்டிற்கு பெற விண்ணப்பித்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்களை http://socialjustice.gov.in அறிந்து கொள்ளலாம். தகுதியுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.