மாணவ, மாணவியரின் கின்னஸ் சாதனை முயற்சி
கோவை: பள்ளி மாணவ, மாணவியருக்கான பல்வேறு விதமான போட்டிகள் நடத்தி, கின்னஸ் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டது, கோவை ‘எலைட் சர்க்கிள்’ அமைப்பு. ‘கேட்வே’ என பெயரிடப்பட்ட இந்த சாதனை நிகழ்ச்சி, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நேற்று நடந்தது. கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் திரளாக பங்கேற்றனர். எல்.கே.ஜி., முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, கதை எழுதுதல், பெயின்டிங், கலை நிகழ்ச்சி போட்டிகள் என 19 விதமான போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் மற்றும் சிறு பரிசுகள் வழங்கப்பட்டன. மேயர் வெங்கடாசலம் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். போட்டி ஒருங்கிணைப்பாளர் பிரதீப் கூறியதாவது: இந்த சாதனை போட்டிகளில் பங்கேற்க பள்ளிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். 3,463 பள்ளிகளில் இருந்து 69 ஆயிரத்து 433 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். உலகின் நீளமான கார்ட்டூன் ஓவியம், அதிகம் பேர் இணைந்து உரக்க படித்த நிகழ்வு, அதிகம் பேர் பங்கேற்ற வினாடி-வினா போட்டி, அதிகம் பேர் பங்கேற்ற ஓவியப் போட்டி, தானியங்களால் வரையப்பட்ட உலகின் மிகப் பெரிய ஓவியம் ஆகிய ஐந்து கின்னஸ் சாதனை முயற்சிகள் நிகழ்த்தப்பட்டன. இத்துடன், அதிகமான பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற கலை இலக்கியப் போட்டி, லிம்கா உலக சாதனை முயற்சிக்காக நிகழ்த்தப்பட்டது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 11 கின்னஸ் மற்றும் லிம்கா உலக சாதனை முயற்சிகள் நிகழ்த்தப்பட்டன. இவ்வாறு, பிரதீப் கூறினார்.