சார்க் நாட்டு மாணவர்களிடையே கட்டணப் பிரச்சினைகள்
நேபாளம் மற்றும் பூடான் உள்ளிட்ட சார்க் நாடுகளை சேர்ந்த மாணவர்கள், சில இந்திய பல்கலைக்கழகங்களில் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள். ஆனால் இதேப் பிரச்சினை, அந்நாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கும் உள்ளது. நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சினை தொடர்பாக எழுத்து மூலமாக பதிலளித்த, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் திருமதி. புரந்தேஸ்வரி, "நேபாளத்திலிருந்து வந்து இந்தியாவின் சில பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அதேபோல் பூடானை சேர்ந்த மாணவர்கள் தங்களின் கல்வி கட்டணத்தை வெளிநாட்டு பணமாக கட்டுவதற்கு நிர்பந்திக்கப்படுவதாகவும் சம்பந்தப்பட்ட நாடுகளிலிருந்து புகார்கள் வந்திருப்பதாக" கூறினார். மேலும் அவர், "கடந்த 2009, செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியான யு.ஜி.சி. தீர்மானம், நேபாளம் மற்றும் பூடான் மாணவர்கள் இந்திய மாணவர்களுக்கு இணையாக நடத்தப்படுவார்கள் என்று கூறினாலும், சுயாட்சி அதிகாரம் உள்ள பல்கலைக்கழகங்கள், தங்களின் சொந்த விதிகளின்படியே செயல்படுகின்றன" என்றார். "இந்திய மாணவர்கள் மேற்கூறிய நாடுகளில் கட்டணம் சம்பந்தமான பிரச்சினைகளை சந்திப்பதைப் பற்றி அதே யு.ஜி.சி. தீர்மானம் குறிப்பிட்டு, நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுள்ளதையும், ஆனால் அரசு அதுசம்பந்தமாக இனிமேல்தான் செயல்பட வேண்டியுள்ளது" என்றும் அவர் கூறினார்.