சர்வதேச அங்கீகாரம் பெற்ற பெங்களூர் ஐ.ஐ.எம்.
எஸ்.எம்.பி.ஜி. என்ற பிரெஞ்சு கன்சல்டிங் அமைப்பு, சர்வதேச அளவிலான 1000 வணிகப் பள்ளிகளின் டீன்கள் மத்தியில் நடத்திய "எட்யுனிவர்சல் வேர்ல்ட்வைடு பிசினஸ் ஸ்கூல்ஸ் ராங்கிங் 2010" என்ற வருடாந்திர சர்வேயின் முடிவில், பெங்களூர் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் உலகளவில் 24வது இடத்தை பெற்றுள்ளது. செக் குடியரசின் தலைநகரான பிரேக் -இல் நடந்த மூன்றாவது எட்யுனிவர்சல் உலக மாநாட்டில் இந்த சர்வே முடிவு வெளியிடப்பட்டது. இதனையடுத்து தொடர்ந்து 3 வது முறையாக இந்தியாவின் நம்பர்-1 மேலாண்மை பள்ளி என்ற அங்கீகாரமும் பெங்களூர் ஐ.ஐ.எம். நிறுவனத்திற்கு கிடைக்கிறது. மேலும் அகமதாபாத் ஐ.ஐ.எம்., உலகளவில் 55வது இடத்தைப் பெறுகிறது. இதன்மூலம் உலகளவில் பட்டியலிடப்படும் முதல் 100 புகழ்பெற்ற வணிகப் பள்ளிகளில் இந்தியாவின் 2 கல்வி நிறுவனங்கள் மட்டுமே இடம்பெறுகின்றன. இதுகுறித்து பெங்களூர் ஐ.ஐ.எம். இயக்குனர் பங்கஜ் சந்திரா கூறுகையில், "நாங்கள் கடந்த பல்லாண்டுகளாகவே ஆசிரியர்களின் தரம், பாடத்திட்டம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்தினோம். மேலும் இ.கியூ.யு.ஐ.எஸ். சான்றிதழையும் பெற்றிருப்பதால், ஆசிய மண்டலத்தில் உள்ள முதுநிலை மற்றும் பிஎச்.டி. படிப்பிற்கான மாணவர்களை கவர்ந்திழுக்கும் ஒன்றாக எங்கள் கல்வி நிறுவனம் திகழ்கிறது" என்றார். இத்தகைய சர்வேயின் தர மதிப்பீடுகளில், 3 விதமான உலகளாவிய கூறுகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அவை, (i) கல்வி நிறுவனத்தின் சான்றிதழுக்கு கிடைக்கும் உலகளாவிய அங்கீகாரம் (ii) சர்வதேச, தேசிய மற்றும் உள்ளூர் நிலைகளில் பெற்றுள்ள தரநிலை மற்றும் உறுப்பினர் அங்கீகாரங்கள் (iii) சர்வதேச அளவிலான 1000 வணிகப் பள்ளிகளின் 'டீன்கள்' அளிக்கும் வாக்குகள், எட்யுனிவர்சல் அமைப்பால் நியமிக்கப்பட்ட சர்வதேச அறிவியல் கமிட்டியினுடைய உறுப்பினர்களின் பரிந்துரைகள் போன்ற பரந்த அளவிலான பகுப்பாய்விற்கு பிறகே தரநிலைகள் வெளியிடப்படுகின்றன.