அங்கீகாரம் இல்லாத பாடப்பிரிவு கல்லூரிக்கு ரூ.1 லட்சம் அபராதம்
மதுரை: அங்கீகாரம் இல்லாத பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை நடத்திய, கன்னியாகுமரி மாவட்டம் தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரிக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. இந்த கல்லூரியில் பி.எஸ்.சி.,(விலங்கியல்) பாடப்பிரிவிற்கு அங்கீகாரம் வழங்கக் கோரி, 2012ல் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கு நிர்வாகம் விண்ணப்பித்தது. மனு நிலுவையில் உள்ளது. 2013-14ம் ஆண்டுக்கு பி.எஸ்.சி.,(விலங்கியல்) பாடப்பிரிவிற்கு, மாணவர் சேர்க்கை நடந்தது; 26 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு முதல் பருவத்தேர்வு நவ.,6 ல் துவங்க, தேர்வுக் கட்டணத்தை கல்லூரி நிர்வாகம் வசூலித்தது. மாணவர்களுக்கு, பல்கலை ஹால் டிக்கெட் வழங்கியது. ஆனால், பல்கலை நிர்வாகம், "பி.எஸ்.சி., (விலங்கியல்) பிரிவிற்கு அனுமதி வழங்கவில்லை. மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது" என தெரிவித்தது. இதை எதிர்த்தும், மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்க உத்தரவிடக் கோரியும், கல்லூரி தாளாளர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி எஸ்.நாகமுத்து முன், மனு விசாரணைக்கு வந்தது. பல்கலை தரப்பில், "அனுமதி கோரிய கல்லூரியின் மனு, நிலுவையில் உள்ளது" என தெரிவிக்கப்பட்டது. நீதிபதி: மாணவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது. அவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். அங்கீகாரம் இல்லாத பாடப் பிரிவில், மாணவர்களை அனுமதித்ததால் கல்லூரிக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. பல்கலைக்கு 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. மதுரை ஒத்தக்கடை அரசு தொழுநோயாளிகள் காப்பகத்திற்கு, கல்லூரி நிர்வாகம் ஒரு லட்சம் ரூபாயை ஒருவாரத்திற்குள் வழங்க வேண்டும். மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அன்னை சந்தியா ஆரவற்றோர் காப்பகத்திற்கு பல்கலை சார்பில் 20 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும். வழங்கியது குறித்து கோர்ட்டிற்கு தெரிவிக்க வேண்டும். விசாரணை நவ., 21 க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.