ஏக பாத ராஜ கபோடாசனத்தில் 105 மாணவர்கள் உலக சாதனை
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மையம், இந்தியன் யோகா அசோசியேஷன் மற்றும் தமிழ்நாடு பிரிவு இணைந்து, யோகா உலக சாதனை நிகழ்வை மேற்கொண்டனர்.கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் சிவகுமார் தலைமையில் நடந்த நிகழ்வில், வேல்ஸ் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் டீன் டாக்டர் குமுதா லிங்கராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.யோகா மைய நிறுவனர் மற்றும் பயிற்சியாளரான சந்தியா மேற்பார்வையில், அங்குள்ள திருமண மண்டபம் ஒன்றில் உலக சாதனை நிகழ்வு நடந்தது. அப்போது, ஒரே நேரத்தில், 105 மாணவர்கள் தொடர்ந்து, 10 நிமிடங்கள் ஏக பாத ராஜ கபோடாசனத்தில் நின்று உலக சாதனை படைத்தனர். இந்த சாதனை, இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பிடித்தது.சாதனை படைத்த பயிற்சி மையத்திற்கும், மாணவ - மாணவியருக்கும் பதக்கம் மற்றும் உலக சாதனைக்கான பட்டயம் வழங்கப்பட்டன.