திறனாய்வு தேர்வில் ஒரே பள்ளியின் 12 மாணவிகள் அசத்தல் தேர்ச்சி
திருக்கோவிலுார்: ஊரக திறனாய்வு தேர்வில் அரகண்டநல்லுார் அடுத்த சு.பில்ராம்பட்டு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 12 மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.தமிழக அரசு நடத்தும் ஊரகத் திறனாய்வு தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் அரசின் உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு பட்டியல் நேற்று வெளியானது. மாவட்ட அளவில் 50 பேர் இதற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அரகண்டநல்லுார் அடுத்த சு.பில்ராம்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் 13 மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், அனைவரும் தேர்ச்சி பெற்றனர். என்றாலும் 12 பேர் அரசின் உதவித்தொகைக்கு தகுதி வாய்ந்தவர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.ஒரே பள்ளியில் 12 மாணவிகள் தேர்வாகி இருக்கும் நிலையில், வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் செந்தில்குமார் தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினார். பயிற்சி அளித்த ஆசிரியர்கள் வைதேகி, இந்திரா, தோமினிக் சேவியர் ஆகியோரும் பாராட்டப்பட்டனர்.