உள்ளூர் செய்திகள்

வி.ஐ.டி., வேலைவாய்ப்பு முகாமில் காக்னிசென்ட்டுக்கு 1,643 பேர் தேர்வு

வி.ஐ.டி., பல்கலையில் நடந்த, வேலைவாய்ப்பு முகாமில், காக்னிசென்ட் நிறுவனம் 1,643 மாணவர்களை பணிக்கு தேர்வு செய்துள்ளது. சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த, வி.ஐ.டி., பல்கலைக் கழக துணைவேந்தர் விஸ்வநாதன் கூறியதாவது: வி.ஐ.டி., பல்கலையில் பயிலும் மாணவர்களுக்காக கடந்த 5ம் தேதி நடந்த வேலை வாய்ப்பு முகாமில், காக்னிசென்ட் நிறுவனம் பங்கேற்றது. இதில் 2,237 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் பி.டெக் மாணவர்கள் 1,051 பேர், எம்.டெக்., 279, எம்.எஸ்., சாப்ட்வேர் இன்ஜினியரிங் 188, எம்.சி.ஏ., 114, எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் 11 பேர் என மொத்தம் 1,643 பேரை காக்னிசென்ட் நிறுவனம் பணியில் அமர்த்த தேர்வு செய்துள்ளது. காக்னிசென்ட் நிறுவனம் அதிகபட்சமாக, ஆண்டிற்கு மூன்று லட்சத்து 5,000 ரூபாய் ஊதியம் வழங்கவுள்ளது. இது வரை 45 நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாமிற்கு வந்துள்ளன. இதில் 1,886 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சில மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டு, தங்களுக்கு பிடித்த நிறுவனத்தில் பணியில் சேரும் நிலையில் உள்ளனர். அமேசான் நிறுவனம், அதிகபட்சமாக ஆண்டிற்கு ஒன்பது லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கவும், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் நிறுவனம், ஆண்டிற்கு ஐந்து லட்சம் ரூபாய் ஊதியம் வழங்கவும் முன்வந்துள்ளது. தற்போது வேலை கிடைத்தவர்கள் அனைவரும், செப்டம்பரில் பணியில் சேருவர். இந்த ஆண்டும் வி.ஐ.டி., பல்கலையில் படிக்கும், அனைத்து மாணவர்களுக்கும் வேலை கிடைக்கும். வேலைவாய்ப்பு முகாமில் ஒரு நாளில் ஒரே நிறுவனம், அதிக மாணவர்களை பணிக்கு தேர்வு செய்திருப்பதற்காக லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற விண்ணப்பிக்கவுள்ளோம். வி.ஐ.டி., பல்கலையில் வேலூர் வளாகத்தில் 13 பாடப்பிரிவுகள், சென்னை வளாகத்தில் ஐந்து பாடப்பிரிவுகளில் பி.டெக்., பட்டப் படிப்பு வழங்கப்படுகிறது. இப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு, நம் நாட்டில் 103 நகரங்கள், துபாய், சிங்கப்பூர், ரியாத் என மொத்தம் 200க்கும் மேற்பட்ட மையங்களில் நடக்கிறது. ஏப்ரல் 16ம் தேதி மாலை 2 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த நுழைவுத் தேர்வு நடைபெறும். இதற்கான விண்ணப்பங்கள் அனைத்து நகரங்களில் 248 தபால் நிலையங்களில் விற்கப்படுகிறது. நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, பிப்ரவரி 28ம் தேதி கடைசிநாள். விண்ணப்பக் கட்டணம் 750 ரூபாய். வி.ஐ.டி., பல்கலையில் 44 நாடுகளிலிருந்து மாணவர்கள் படிக்கின்றனர். பல்கலையில் 21 இந்திய மொழிகள், 16 வெளிநாட்டு மொழிகள் என 37 மொழிகள் பேசப்படுகிறது. பிரெஞ்சு, ஜெர்மனி, ஜப்பான், ஸ்பெயின், சீனா மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.இவ்வாறு விஸ்வநாதன் கூறினார். பேட்டியின் போது, வி.ஐ.டி., பல்கலை துணைத் தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன், சம்பத், சேகர் விஸ்வநாதன், செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்