தொழில் நுட்ப பயிற்சி மையத்தால் 2,000 பேருக்கு பயிற்சி
காரைக்குடி தொழில்நுட்ப பயிற்சி மையத்தால், 2 ஆயிரம் இளைஞர்கள் பயன்பெறுவர், என உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசினார். காரைக்குடியில், இளைஞர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி மைய திறப்பு விழா நடந்தது. அறிவியல் தொழில்நுட்ப செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் ஜவஹர் வரவேற்றார். அமைச்சர் சிதம்பரம் பேசுகையில், "7.10 கோடி ரூபாயில் இப்பயிற்சி மையம் கட்டப்பட்டுள்ளது. ஐரோப்பா ஒன்றியம், மத்திய அரசும் இணைந்து நடத்துகிறது. மேற்கு வங்காளம், புனே, தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இத்திட்டம் செயல்படுகிறது. இங்கு, 2000 இளைஞர்கள், மகாராஷ்ட்ரா, மேற்கு வங்காளத்தில் 600 மாணவர்களுக்கு உயர்தொழில்நுட்ப பாடத்திட்டத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், வாழ்க்கை கல்வி, சுயதொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அடிப்படை பயிற்சியில்லாததால், இளைஞர்களிடம் கூர்மையான திறன் குறைவாக உள்ளது. இவற்றை வளர்க்கவே, இது போன்ற பயிற்சி மையம் துவக்கப்படுகிறது" என்றார்.