காலை உணவு திட்டம் விரிவாக்கம் 26ல் முதல்வர் துவக்கி வைப்பு
சென்னை: முதல்வரின் காலை உணவு திட்டம், நகர்ப்புற பகுதிகளில் உள்ள 2,430 அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளிகளில், வரும் 26ம் தேதி துவக்கப்பட உள்ளது.அரசு பள்ளி மாணவர்களுக்கு, முதல்வரின் காலை உணவு திட்டம், நாட்டிலேயே முதல் முறையாக 2022 செப்டம்பரில் தமிழகத்தில் துவக்கப்பட்டது. கடந்த 2024 ஜூலை மாதம், ஊரகப் பகுதி களில் உள்ள அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டது.இதை தொடர்ந்து, 'முதல்வரின் காலை உணவு திட்டம், நகர்ப்புற பகுதிகளில் உள்ள 2,430 அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும்' என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி, முதல்வரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை, சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் துவக்கப் பள்ளியில், வரும் 26ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கலந்து கொள்கிறார்.