புறக்கணிக்கப்படும் பார்மசி கல்லூரி ஆசிரியர்கள்
மதுரை: ஏ.ஐ.சி.டி.இ., விதிமுறையை கடைபிடிக்காமல், சம்பள விகிதத்தில் பார்மஸி கல்லூரி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். பார்மஸி கல்லூரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் அகில இந்திய தொழில்நுட்ப குழுமம் (ஏ.ஐ.சி.டி.இ.,) மற்றும் இந்திய பார்மஸி குழுமம் (பி.சி.ஐ.,)வுக்கு உள்ளது. சென்னை, மதுரை அரசு பார்மஸி கல்லூரிகளில் பி.பார்ம்., மற்றும் எம்.பார்ம் படிப்பும், கோவை, தஞ்சையில் பட்டயப் படிப்பான டி.பார்மும் நடத்தப்படுகின்றன. இக்கல்லூரிகள் மருத்துவக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. தமிழக பார்மஸி கல்லூரிகளில் 71 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்ஜினியரிங், பாலிடெக்னிக், பார்மஸி, மேலாண்மை கல்லூரிகள் ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்று, அதன் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இதை அரசு இன்ஜினியரிங், பாலிடெக்னிக் மற்றும் மேலாண்மை கல்லூரிகள் முழுமையாக பின்பற்றுகின்றன. ஆனால் பார்மஸி கல்லூரிகள் மட்டும் அங்கீகாரம் பெறுகின்றனவே தவிர, விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. குறிப்பாக ஏ.ஐ.சி.டி.இ., வரையறுத்துள்ள சம்பள விகிதத்தை பின்பற்றுவதில்லை. இங்கு கல்லூரி முதல்வர்களுக்கு ரூ.37400 மற்றும் கிரேடு சம்பளம் ரூ.10000 மற்றும் ஸ்பெஷல் அலவன்ஸ் ரூ.3000. பேராசிரியர்களுக்கு சம்பளம் ரூ.37400, கிரேடு சம்பளம் ரூ.9000 மற்றும் விரிவுரையாளர்களுக்கு ரூ.15600 மற்றும் கிரேடு சம்பளம் ரூ.8000 வழங்க ஏ.ஐ.சி.டி.இ., அமைப்பு சிபாரிசு செய்துள்ளது. இதை இன்ஜினியரிங், பாலிடெக்னிக் மற்றும் மேலாண்மை கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் பார்மஸி கல்லூரிகளில் வழங்குவதில்லை. இங்கு முதல்வர்களுக்கு சம்பளம் 15600, கிரேடு சம்பளம் 7200, ஸ்பெஷல் அலவன்ஸ் கிடையாது. பேராசிரியர்களுக்கு சம்பளம் 15600, கிரேடு சம்பளம் ரூ.6600, உதவி பேராசிரியர்களுக்கு ரூ.15600, கிரேடு சம்பளம் ரூ.5400, விரிவுரையாளர், டியூட்டர்களுக்கு சம்பளம் ரூ. 9300, கிரேடு சம்பளம் ரூ.4800 வழங்கப்படுகிறது. மேலும் இந்த சம்பள விகித குறைபாட்டை பலமுறை ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் பி.சி.ஐ., ஆய்வின்போதும், தனிநபர் குழுவிடம் தெரிவித்தும் பல ஆண்டுகளாக கண்டு கொள்ளப்படவில்லை. மேலும் தனிநபர் குழு பரிந்துரையில் டி பார்ம் படித்த பார்மஸிஸ்ட், டி.எம்.எல்.டி., படித்த டெக்னீஷியன், பிளஸ்2-க்குப் பின் இரு ஆண்டு பட்டயம் படித்தவர்களுக்கு சம்பளம் ரூ. 9300, கிரேடு சம்பளம் 4800 வழங்கப்படுகிறது. ஆனால் பார்மஸி கல்லூரி ஆசிரியர்களோ நான்கு ஆண்டு இளங்கலை, இரண்டாண்டு முதுகலை படிப்பு படித்து பணியாற்றுகின்றனர். பலர் ஆராய்ச்சிப் பட்டமும் பெற்றுள்ளனர். ஆனால் இருதரப்பினருக்கும் ஒரே சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே பார்மஸி கல்லூரி ஆசிரியர்கள், மாற்றான்தாய் மனப்பான்மையுடன் பார்க்காமல், முறையான சம்பளம் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஊதிய விகிதத்தை சீரமைக்கக் கோரி, அகில இந்திய பார்மஸி ஆசிரியர்களின் கூட்டமைப்பும் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. பார்மசி கல்லூரி ஆசிரியர்களின் பரிதாப நிலையை முதல்வர் ஜெயலலிதா போக்க வேண்டும் என கோரியுள்ளனர்.