பேராசிரியர்களுடன் இணைந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு: ஈரோடு சி.என்.கல்லூரியை, அரசு கல்லூரியாக அறிவிக்க கோரி ஆசிரியர், அலுவலர்கள், மாணவ-மாணவியர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில் அரசு கல்லூரி இல்லை என்ற பொதுமக்களின் மனக்குறையை போக்கிட, சட்டசபை உறுதிமொழி குழு பரிந்துரை அடிப்படையில், ஈரோடு சி.என்.கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்க வேண்டும். இக்கல்லூரி, 17 ஆண்டுகளாக மாநில அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இக்கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்க வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில், கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அரசு கல்லூரியாக அறிவிப்பதால், கூடுதல் நிதிச்சுமை ஏற்படாது. கல்லூரியின் சொத்துக்கள், அரசு உடமையாகும். உள்கட்டமைப்பு வசதி பெருகும். புதிய பாட வகுப்புகள் துவங்கும். அடிப்படை வசதிகள் கிடைக்கும். ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பெற வழிவகை கிடைக்கும் என்று வலியுறுத்தினர். கல்லூரி ஆசிரியர், அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். நாச்சிமுத்து முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.