உள்ளூர் செய்திகள்

பொதுத்தேர்வுக்கு பின் செய்முறை தேர்வு

திருப்பூர்: பிளஸ் 2 தேர்வு முடிந்த பின், 15 நாள் இடைவெளி இருப்பதால், அந்நாட்களில் செய்முறை தேர்வை நடத்தலாம் என, ஆசிரியர்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது. மார்ச் மாதம், பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளது; முன்னதாக, பிப்., மாதத்தில் செய்முறை தேர்வு நடத்தப்படுவது ஆண்டுதோறும் வழக்கமாக உள்ளது. நடப்பு கல்வியாண்டில், டிச., மாதம் நடக்க வேண்டிய அரையாண்டு தேர்வு இம்மாதம் ஒத்தி வைக்கப்பட்டதால், "ரிவிஷன்&' செய்வதற்கான அவகாசம் குறைந்துள்ளது. தொடர்ந்து செய்முறை தேர்வு, அதை தொடர்ந்து பொதுத்தேர்வு என வருவதால், மாணவ - மாணவியர் முழுமையாக படிக்க முடியாது; இதனால், அரசு பள்ளிகளில் மாணவர் தேர்ச்சி விகிதம் குறைய அதிக வாய்ப்புள்ளதாக ஆசிரியர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு, முதன்மை பாடத்தேர்வுகள், மார்ச், 23க்குள் முடிந்து விடும் நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி ஏப்., மூன்றாவது வாரத்தில்தான் துவங்குகிறது. 15 நாட்களுக்கு மேல், இடைவெளி உள்ளதால், இந்நாட்களில் செய்முறை தேர்வை நடத்திக் கொள்ளலாம் என, ஆசிரியர்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது. பிப்., மாதம் முழுவதும், பொதுத்தேர்வுக்கு தயாராகும் வகையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, ரிவிஷன் டெஸ்ட் போன்றவை முழுமையாக நடத்தப்பட்டால், மாணவர்கள், பொதுத்தேர்வை நல்ல முறையில் எதிர்கொள்வர். அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவர். பொதுத் தேர்வுக்குபின், மார்ச், 25 முதல் ஏப்., 10 வரை உள்ள அவகாசத்தில், செய்முறை தேர்வு நடத்தும் பட்சத்தில் மாணவர்களும், எளிதான மனநிலையில் எந்த டென்ஷனும் இல்லாமல், செய்முறை தேர்வை எழுத முடியும் என, ஆசிரியர்கள் கூறுகின்றனர். இதில் உள்ள சாதக, பாதகங்களை ஆராய்ந்து, வாய்ப்பிருக்கும் பட்சத்தில் பொதுத்தேர்வுக்கு பின், செய்முறை தேர்வை நடத்த கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், திருப்பூரில், நான்கு ஆண்டுகளுக்கு முன் பொதுத்தேர்வுக்கு பின் செய்முறை தேர்வு நடத்தியபோது, சில நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டதால், கைவிடப்பட்டது. மீண்டும் சாத்தியப்படுமா என்பதை, கல்வித்துறை உயரதிகாரிகளே முடிவு செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்