உள்ளூர் செய்திகள்

நெட் தேர்வில் வெற்றி பெற...

இத்தேர்வை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்கள் அடுத்து ஆராய்ச்சிப் படிப்பை துவங்குவதற்கும், கல்லூரி ஆசிரியர் பணியிடங்களில் சேரவும் வாய்ப்புள்ளது என்பதால், போட்டி நிறைந்த ஒன்றாக விளங்கி வருகிறது. தேசிய அளவில் மாணவர்கள் எழுதும் இத்தேர்வின் வெற்றி ரகசியம் குறித்து மதுரை காமராஜ் பல்கலைக்கழக யு.ஜி.சி., நெட் ஆதிதிராவிடர் பயிற்சி வகுப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வெ.சின்னையா தெரிவித்தது: கடுமையான பயிற்சியும், மாதிரித் தேர்வுகளும்தான் இந்த தேர்வின் வெற்றி ரகசியங்கள். யு.ஜி.சி.,யின் 11வது ஐந்தாண்டு திட்டத்தின்படி, ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஆதிதிராவிடர்களுக்கான இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் துவங்க யு.ஜி.சி., கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவில் மற்ற பல்கலைக்கழகங்களை விட, மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் சிறப்பான வசதி செய்யப்பட்டுள்ளன. டிசம்பரில் நடைபெறவிருக்கும் இந்த ஆண்டுக்கான தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் ஆக.8 முதல் நடைபெறுகிறது. முதுநிலை பட்டப்படிப்பு படித்து முடித்தவர்களுக்கு சனி, ஞாயிறுகளில் மாலை 6.30 - 8.30 மணிவரையிலும், பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு படித்து வரும் மாணவர்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11 முதல் 1 மணி வரையிலும் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நெட் தேர்வில் மூன்று வகையான தாள்கள் உள்ளன. முதல் தாள், பத்துவகையான பொது அறிவுப் பகுதிகளிலிருந்து கொள்குறி வகை தேர்வு. ஒவ்வொரு பகுதியிலிருந்தும் 5 கேள்விகள் இடம்பெறும். 50 வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டும். இதற்கு மதிப்பெண் 100. இத்தேர்வுக்கு ஒரு மணிநேரம் 15 நிமிடங்கள். இரண்டாம் தாளுக்கு ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள். மாணவர் தேர்வு செய்த பாடத்திலிருந்து 50 கேள்விகளுக்கு குறுகிய அளவில் பதில் அளிக்க வேண்டும். இதற்கு மதிப்பெண் 100. இரண்டும் ஒரே வேளையாக காலை 9.30 மணி முதல் மதியம் 12 வரை நடைபெறும். மூன்றாம் தாள், மதியம் 1.30 முதல் 4 மணி வரை நடைபெறும். மாணவர் தேர்வு செய்த பாடத்திலிருந்து கேள்விகள் இடம்பெறும். கேள்வித்தாளிலேயே மாணவர்கள் பதில் அளிக்க வேண்டிய பகுதி இடம்பெறும். ஆகவே அதற்குள் அவர்கள் பதில் அளிக்க வேண்டும். இதற்கு மொத்தம் 200 மதிப்பெண்கள். முதல் இரு தேர்வுத் தாள்களிலும் இணைந்து பொதுப்பிரிவினர் 50 சதவீதம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 40 சதவீதம் பெற்றிருந்தால்தான் மூன்றாவது தாள் திருத்தப்படும். ஆகவே முதல் இரு தாள்களில் மாணவர்கள் தேர்ச்சி அடைவது கட்டாயம். இங்கு பயிற்சி வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள், தொடர்ச்சியாக மாதிரித் தேர்வுகள் எழுதுவதால் அவர்களுக்கு பல்வேறு கேள்விகளுக்கான அறிமுகம் கிடைக்கிறது. அதேபோன்ற கேள்வி தேர்வில் வரும்போது, அவர்கள் அதை எளிதில் முடித்து விடுகின்றனர். இதுவே மாணவர்களின் வெற்றி ரகசியம் என்றார் பேராசிரியர் வெ.சின்னையா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்