ஐ.ஐ.டி.,யில் பசுமை ஹைட்ரஜன் மையம்
உரங்கள், இரும்பு போன்றவற்றின் உற்பத்திக்கு ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. வரும் காலங்களில் வாகனங்களுக்கு எரிபொருளாகவும் ஹைட்ரஜன் பயன்படுத்தப்பட உள்ளது. தற்போது நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்றவற்றை உள்ளடக்கிய, புதைபடிம எரிபொருள் வாயிலாக, ஹைட்ரஜன் தயாரிக்கப்படுகிறது. அந்த ஹைட்ரஜனில், கார்பன் டை ஆக்சைடு வெளியேறி, சுற்றுச்சூழல் மாசடைகிறது. மத்திய அரசு, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் சூரியசக்தி, காற்றாலையை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை பயன்படுத்தி, பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்வதை ஊக்குவித்து வருகிறது.இதற்காக தமிழகம், கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில், கிரீன் ஹைட்ரஜன் வேலி இன்னோவேஷன் சென்டர் எனப்படும் மையம் அமைக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த மையம், ஆலை மற்றும் ஆய்வகத்தை உள்ளடக்கியது. அதன்படி, சென்னையில், 100 கோடி ரூபாய் முதலீட்டில், டிட்கோ நிறுவனமும், சென்னை ஐ.ஐ.டி., கல்வி நிறுவனமும் இணைந்து, பசுமை ஹைட்ரஜன் ஆலை மற்றும் ஆய்வகத்தை அமைக்கின்றன.அதில், 30 கோடி ரூபாய், மத்திய அரசின் மானியம். தமிழக அரசு, 10 கோடி ரூபாய் வழங்கும். டிட்கோவின் பங்கு, 5 கோடி ரூபாய். மீதி தொகையை, பல்வேறு தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்யும். மையத்தின் ஆய்வகம், ஐ.ஐ.டி., வளாகத்தில் அமைக்கப்படும். தினமும், 500 டன் வரை உற்பத்தி செய்யக்கூடிய பசுமை ஹைட்ரஜன் ஆலை, சென்னை அருகில் அமைக்கப்படும். இதுவே தமிழகத்தின் பசுமை ஹைட்ரஜனின் முன்மாதிரி ஆலையாக இருக்கும். அந்த ஆலையில், ஹைட்ரஜன் உற்பத்தி செய்து திரவப்படுத்தி கிடங்கில் இருப்பு வைக்கப்படும்.பின், குழாய் வழித்தடத்தில், ஆலைகளுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது. ஆய்வகத்தில், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, தொழில்நுட்பம் உள்ளிட்டவை தொடர்பாக, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வகுப்புகள் நடத்தப்படும். துாத்துக்குடி மாவட்டத்தில், தனியார் நிறுவனங்கள் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் ஆலை அமைக்க ஆர்வம் காட்டுகின்றன. அந்த ஆலைக்கு பயன்படுத்த சூரியசக்தி, காற்றாலை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கு தேவைப்படும் நிலம் உள்ளிட்டவை தொடர்பாக, அந்த நிறுவனங்கள், தமிழக அரசுடன் பேச்சு நடத்திவருகின்றன.