காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி
விருதுநகர்: விருதுநகரில் அரசு விடுதிகளில் படிக்கும் 22 மாணவர்களுடன் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அரசு விடுதிகளில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களின் லட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லுாரி, இடம் உள்ளிட்டவை குறித்து கலெக்டர் ஜெயசீலன் கேட்டறிந்தார்.பின் அவர் பேசியதாவது: பள்ளி, கல்லுாரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும். பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும். பிளஸ் டூ முடித்ததும் உயர்கல்விக்கு கட்டாயம் சேர வேண்டும். இட ஒதுக்கீடு, மதிப்பெண் முறைகளை அறிந்து கொண்டு தேர்வை தெளிவாக எதிர் கொள்ள வேண்டும். அதே போல் ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும், என்றார்.