சி.பி.எஸ்.இ.,க்கு மாறும் லட்சத்தீவு பள்ளிகள்
கவராட்டி: லட்சத்தீவில் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் அடுத்த கல்வியாண்டு முதல், மலையாளத்தில் இருந்து சி.பி.எஸ்.இ., ஆங்கில வழி கல்வி முறையை செயல்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில் செயல்படும் பள்ளிகளில், எஸ்.சி.இ.ஆர்.டி., எனப்படும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் திட்டத்தின்படி மலையாள மொழி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், மாணவர்களால் போட்டித் தேர்வுக்கு தயாராக முடியாத நிலை இருப்பதால், ஆங்கில வழி கல்விக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், இது தொடர்பாக கல்வித் துறை நேற்று வெளியிட்ட உத்தரவு:அடுத்த கல்வியாண்டான 2024 - 25 முதல், லட்சத் தீவுகளில் கல்வித் துறையின் கீழ் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஒன்றாம் வகுப்பு முதல் சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் ஆங்கில வழி கல்வி முறை அமல்படுத்தப்படும்.இதன் வாயிலாகவே அனைத்து மாணவர்களும் சேர்க்கப்படுவர். கல்வியின் தரத்தை உயர்த்துதல் மற்றும் அதை சீரமைக்கும் நோக்கத்தில் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது.மாணவர்களின் எதிர்கால கல்வி அறிவை மேம்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, மாணவர்களை போட்டித் தேர்வுக்கு எளிதில் தயார்படுத்த முடியும். ஒன்று முதல் பிளஸ் 2 வரையில், மூன்று மொழி கொள்கை பயன்படுத்தப்படும். இதனால், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் மாணவர்கள் திறனை வளர்த்துக் கொள்ள முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.