படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவிகள்
திருப்புவனம்: திருப்புவனத்தில் பிளஸ் 2 விற்கு மேல் மாணவிகளை கல்வி பயில வசதி இல்லாததால் பலர் படிப்பை தொடர்வதில்லை.திருப்புவனம் தாலுகாவில் திருப்புவனம், பழையனூர், திருப்பாச்சேத்தி, மணலூர் ஆகிய ஐந்து இடங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்கள் உள்ளன. இதில் திருப்புவனம் அரசு பெண்கள் பள்ளியில் இரண்டாயிரத்து 400 மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.திருப்புவனம் வட்டாரத்திலேயே பெண்களுக்கு என தனியாக உள்ள ஒரே பள்ளி இது தான். எனவே சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவிகள் இங்கு கல்வி பயில்கின்றனர். முற்றிலும் விவசாய கூலி வேலை செய்யும் கிராமப்புற பெற்றோர்களின் குழந்தைகள் மட்டுமே அரசு பள்ளியில் கல்வி பயில்கின்றனர்.இவர்கள் பிளஸ் 2 விற்கு பிறகு உயர் கல்வி பயில திருப்புவனத்தில் அரசு மகளிர் கலை கல்லுாரியோ, தொழிற்பயிற்சி கல்லுாரியோ கிடையாது. மதுரை அல்லது சிவகங்கை செல்ல வேண்டும், பெண் குழந்தைகளை தனியாக அவ்வளவு தூரத்திற்கு கல்வி பயில பெற்றோர் அனுமதிக்காமல் பிளஸ் 2 முடித்த உடனேயே சில பெண்களுக்கு திருமணம் செய்து கொடுத்து விடுகின்றனர்.இளம் வயதில் திருமணம் நடப்பதால் மாணவிகள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர். கடந்த இரு வருடங்களில் திருப்புவனம் வட்டாரத்தில் இளம் வயது திருமணம் நடந்தாலும் வழக்கு ஏதும் பதியப்படவில்லை. கடந்த 2022 - - 23ம் கல்வி ஆண்டில் திருப்புவனம் அரசு பெண்கள் பள்ளியில் 422 பேர் பிளஸ் 1 பயின்ற நிலையில் பிளஸ் டூவிற்கு 403 பேர் மட்டுமே சென்றனர்.ஒட்டு மொத்தமாக திருப்புவனத்தில் 799 மாணவிகளில்718 பேர் மட்டுமே பிளஸ் 2 விற்கு சென்றனர். 718 பேரில் உயர்கல்வி சென்றவர்கள் 50 சதவிகிதம் கூட கிடையாது பெண்கள் உயர்கல்வி பயிலாதது குறித்து இதுவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த வித ஆய்வும் செய்யப்படவில்லை. பிளஸ் 1ல் இருந்து பிளஸ் 2 விற்கு ஏன் வரவில்லை என விரிவான விசாரணை கூட நடத்தப்படுவது கிடையாது.சாதாரணமாக தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளும் கல்வி துறை உயர் கல்வி பயிலும் மாணவிகள் குறித்து எந்த வித அக்கறையும் செலுத்தவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் மாணவிகள் உயர்கல்வி கற்க செல்லாதது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.