தேர்ச்சி பெறாதவர்களுக்கு முதல்வர் அறிவுரை
சென்னை: தேர்வு மதிப்பெண் மட்டுமே முடிவல்ல காலம் பல வாய்ப்புகள் வழங்கத்தான் போகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்விக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். பிள்ளைகளின் மீது பெற்றோர் எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், அவர்கள் விரும்பிய துறைகளை தேர்ந்தெடுக்க ஊக்குவிக்க வேண்டும்.தேர்ச்சி பெற இயலாத மாணவர்கள், துவண்டுவிட வேண்டாம். அவர்களும் உயர்கல்வி பெற்று, வாழ்வில் வெற்றி பெற்றே தீருவர். அதற்கான வாய்ப்புகளை அரசு உறுதி செய்யும். ரிசல்ட் எதுவானாலும், அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும், பெற்றோரும் உணர வேண்டும். தேர்ச்சி பெறாதவர்கள், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்கள் போன்றோருக்கு, இன்னும் பல வாய்ப்புகளை காலம் வழங்கத்தான் போகிறது.இது, வாழ்வின் துவக்கம் மட்டுமே. இனிதான் சிறப்பான பேஸ் அமையவுள்ளது என்ற பாசிட்டிவ் அவுட்லுக்குடன், தேர்வு முடிவுகளை அணுக வேண்டும். பெற்றோரும் பிள்ளைகள் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், அவர்களின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு, ஒரு நல்ல நண்பனாக துணை நிற்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.