வழிகாட்டுதல் படிப்பு ஆசிரியர்கள் சேரலாம்
சென்னை: 'திறன் மேம்பாட்டுக்கான டிப்ளமா படிப்புக்கு, ஆசிரியர்கள் நவம்பர், 5க்குள் விண்ணப்பிக்கலாம்' என, என்.சி.இ.ஆர்.டி., தெரிவித்து உள்ளது.என்.சி.இ.ஆர்.டி., எனும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சார்பில், ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காகவும், மாணவர்களுக்கு போதிய ஆலோசனைகளை வழங்கவும், 'வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை' என்ற பெயரில், ஓராண்டு டிப்ளமா படிப்பு நடத்தப்படுகிறது.வரும், 2026ம் கல்வியாண்டுக்கான, வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை டிப்ளமா படிப்புக்கான, விண்ணப்ப பதிவு நடந்து வருகிறது. ஓராண்டு படிப்பில், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, ஆறு மாதங்கள், தொலைதுார கல்வியாக பாடங்கள் நடத்தப்படும்.ஜூலை முதல் செப்டம்பர் வரை, பயிற்சி மையங்களில் நேரடி வகுப்புகள் நடக்கும். கடைசி மூன்று மாதங்கள், ஆசிரியர்கள் தங்கள் சொந்த கிராமங்களில் பயிற்சி பெற வேண்டும்.ஆர்வமுள்ள ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பள்ளி நிர்வாக குழுவினர் ஆகியோர் நவம்பர், 5ம் தேதிக்குள், https://ncert.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, என்.சி.இ.ஆர்.டி., தெரிவித்துள்ளது.