ஆறு கலைஞர்களுக்கு கலைச்செம்மல் விருது
சென்னை: ஓவியம் மற்றும் சிற்பக் கலைகளில் திறமைமிக்க ஆறு கலைஞர்களுக்கு, கலை பண்பாட்டுத்துறை சார்பில், 'கலைச்செம்மல்' விருதுகள் வழங்கப்பட்டன.ஒவ்வொரு ஆண்டும், மரபுவழி மற்றும் நவீனபாணி ஓவியம் வரையும் கலைஞர்கள், சிற்பக் கலைகளில் திறமையான கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, 'கலைச் செம்மல்' விருது வழங்கப்படுகிறது.அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கு, மரபுவழி ஓவியப் பிரிவில், மா.பாலசுப்பிரமணியன்; நவீனபாணி ஓவியப் பிரிவில் கோ.வில்வநாதன், ராஜா; மரபுவழி சிற்பப் பிரிவில், தே.ஸ்ரீகண்ட ஸ்தபதி மற்றும் உ.பத்மநாமன்; நவீனபாணி சிற்பப் பிரிவில் சாந்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கலை பண்பாட்டுத் துறை அமைச்சர் சாமிநாதன், தேர்வான ஓவிய, சிற்பக் கலைஞர்களுக்கு, கலைச்செம்மல் விருதுக்கான செப்பு பட்டயம், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார்.நிகழ்ச்சியில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலர் மணிவாசன், துறை இயக்குநர் வளர்மதி, இணை இயக்குநர் கார்குழலி ஆகியோர் பங்கேற்றனர்.