தமிழ்நாட்டிற்கு பொது நுழைவுத்தேர்வு கிடையாது
கடந்த 4 வருடங்களுக்கு முன்னர், எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான நுழைவுத் தேர்வை ரத்துசெய்த தமிழக அரசு, 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே, ஒற்றை சாளர முறையில், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற புதிய நடைமுறையைக் கொண்டுவந்தது. அதன்படிதான் தற்போது அனைத்தும் நடந்து வருகிறது. இந்திய மருத்துவ கவுன்சில்(எம்.சி.ஐ) மருத்துவ படிப்புகளுக்கு நாடெங்கும் ஒரே நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டத்தை கடந்தாண்டு டிசம்பரில் கொண்டுவந்தது. இந்த திட்டத்திற்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களும், தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்களும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த புதிய திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதை இந்தாண்டு ஜனவரி மாதம் சென்னை உயர்நீதி மன்றம் நிறுத்திவைத்தது. உச்ச நீதிமன்றமும் தனது தீர்ப்பில் இந்த புதிய விதி தமிழ் நாட்டிற்கு பொருந்தாது என்று கூறியுள்ளது. தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு சம்பந்தமான, ஜானாதிபதியின் ஒப்புதலைப் பெற்ற தனி சட்டங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நாடெங்கிலும் நுழைவுத் தேர்வு நடந்தாலும், தமிழ்நாட்டில் மட்டும் ஏற்கனவே உள்ள நடைமுறையிலேயே அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.