ரயில்வேயில் பதவி உயர்வின்றி 60,000 பணியாளர்கள் தவிப்பு
சென்னை: ரயில்வேயில் தொழில்நுட்ப மேற்பார்வையாளர்களுக்கு, உரிய தகுதி இருந்தும், 'குரூப் - பி' அந்தஸ்து பதவி உயர்வு வழங்காதது, அவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.ரயில்வேயில், நாடு முழுதும் தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் பிரிவில், 60,000க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு, முதுநிலை பொறியாளர்களுக்கான, 'குரூப் - பி' அந்தஸ்து வழங்கி, அதற்கான ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என, பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.ஆனால், அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. ஊதிய உயர்வு தொடர்பாக, மத்திய தீர்ப்பாயம், அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய போதும், ரயில்வே நிர்வாகம், இன்னும் அமல்படுத்தாமல் உள்ளது.இது குறித்து, இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்க பொதுச்செயலர் ரமேஷ் கூறியதாவது:ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்களில், உரிய தகுதி உள்ளவர்களுக்கு 'குரூப் - பி' அந்தஸ்து வழங்கி, பதவி உயர்வு வழங்க வேண்டும் என, பல ஆண்டுகள் தொடர்ந்து போராடி வருகிறோம்.புதிதாக உருவாக்கப்படும் ரயில்வே உட்கட்டமைப்பு மற்றும் புதிதாக இயக்கப்படும் ரயில்களுக்கு, தேவையான புதிய தொழில்நுட்ப பணிகளை உருவாக்குதல், ரயில்வே பொறியாளர்களுக்கு ரிஸ்க் மற்றும் ஹார்ட்ஷிப் அலவன்ஸ் வழங்குவது, இரவு பணி அலவன்ஸ், தேசிய விடுமுறை பணி அலவன்ஸ் போன்றவை வழங்கப்படாது என, சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.அவற்றை வழங்கக் கோரியும் போராட்டம் நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.