உள்ளூர் செய்திகள்

வாழ்க்கையே கணிதம் தான்

கணிதத்தையும் சுவாரஸ்யமாக தெரிந்து கொள்ள முடியும் என்பதை, நிரூபித்து வருபவர் பேராசிரியரும், பை கணித மன்றத்தின் நிறுவனருமான சிவராமன். அவர், தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் இதழில் கணிதம் குறித்த கட்டுரைகளை எழுதி அனைவரையும் ஈர்த்து வருகிறார். அவரிடம் பேசியதில் இருந்து...கணிதம் கசப்பது ஏன்?பொதுவாக, கணிதம் சார்ந்த சூத்திரங்கள் தெரிந்த பலருக்கு, வாழ்க்கையில் எப்படியெல்லாம் அதன் பயன்பாடு இருக்கும் என்பதை அறிய ஆர்வம் இருக்காது. ஒரு சம்பிரதாயமாக, மதிப்பெண் சார்ந்ததாக நினைப்பது தான் காரணம். கணிதத்தால் கிடைக்கும் அனுகூலத்தை சொல்லும்போது இயல்பாக ஆர்வம் வந்துவிடும்.கணிதத்தின் மீதான ஆர்வத்தை துாண்ட நீங்கள் செய்வது?கணித மேதை ராமானுஜம், பை எனும் கணித குறியீடு சார்ந்த பணிகளில் ஈடுபட்டவர். அவரது ரசிகனான நான், கணிதத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த பை கணித மன்றம் என்ற அமைப்பை, 2007ல் ஏற்படுத்தினேன்.அப்போது முதல் இப்போது வரை, கணிதம் சார்ந்த ஆச்சர்யங்களையும், அதிசயங்களையும் எளிமையாக மாணவர்களுக்கு போதித்து வருகிறேன்.கணிதம் சார்ந்த கட்டுரைகளுக்கு வரவேற்பு உள்ளதா?பல கல்லுாரிகளுக்கு சென்று, மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்துவதும், கருத்தரங்குகளில் பங்கேற்று பேசுவதுமாக இருந்தேன்.ஆனால் அது, அந்த அரங்கில் இருப்போருக்கு மட்டுமே பயனுள்ளதாக இருப்பதை உணர்ந்தேன். நான் தொகுக்கும் விஷயங்களை கட்டுரையாக எழுதினேன். அவற்றை தொகுத்து 2009ல் கதையில் கலந்த கணிதம் என்ற நுாலாக வெளியிட்டேன். அதை மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் படித்து பாராட்டினர். தொடர்ந்து எழுதும்படி கூறினர்.கணிதத்தில் கதைகள் சாத்தியமா?மாணவர்களை பெரிதும் கவரும் பஞ்சதந்திர கதைகள், தெனாலிராமன் கதைகள் உள்ளிட்டவற்றில், கணிதத்தை புகுத்தி எளிமையாக சொல்வேன். சில கணிதங்களுக்கு, நாமே கதைகளை உருவாக்க வேண்டியிருக்கும். தேவைக்கு ஏற்ப கதைகளை புனைகிறோம். கதைகள் முக்கியமல்ல, அதில் வரும் கணிதம்தான் முக்கியம்.எந்தெந்த முறைகளில் கணிதத்தை புகட்டுவீர்கள்?நம் நாட்டில் உள்ள பெரிய கட்டுமானங்கள், கோவில்கள் மட்டுமின்றி எகிப்தின் பிரமிடு உள்ளிட்டவற்றின் தகவல்களைக் கூறி, அந்த அதிசயக் கட்டுமானங்களுக்குப் பின் உள்ள கணிதத்தை விளக்குவேன்.நாம் இப்போது பேசிக்கொள்ளும் மொபைல் போன்களுக்கு இடையில் இருக்கும் கணிதத்தையும், அதற்கான சூத்திரங்களையும் விளக்குவேன்.உதாரணம்?மனிதனின் தேவைக்கு ஏற்ப அறிவியல் வளர்கிறது. அறிவியலை கணிதமே நிலைநிறுத்துகிறது.உதாரணமாக, சந்திரனுக்கு விண்கலம் அனுப்புவது அறிவியல் என்றால், எந்த வடிவத்தில், எங்கிருந்து, எத்தனை கி.மீ., வேகத்தில், எந்த திசையிலிருந்து, எவ்வளவு உந்துவிசையில் செலுத்த வேண்டும் என்பதை கணிதமே தீர்மானிக்கும். அதனால், அன்றாட வாழ்வில் கணிதம் முக்கியம்.அதை எந்தெந்த வழியில் சொல்ல முடியுமோ அப்படியெல்லாம் சொல்கிறேன். காரணம், நாம் உண்ணுவது, உறங்குவது, விழிப்பது, களிப்பது என, வாழ்வே கணிதம் சார்ந்தது தான்.-நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்