மைசூரில் விளையாட்டு கண்காட்சி
மைசூரு: இன்றைய டிஜிட்டல் யுகத்தில், சிறார்கள் மொபைல் கேம்களில் மூழ்கியுள்ளனர். அவர்களுக்கு நம் நாட்டு பாரம்பரிய விளையாட்டுகள் குறித்து தெரிவது இல்லை. இதை சிறார்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கில், மைசூரில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மைசூரு நகரில், 'விளையாட்டு திறன்' என்ற பெயரில், ராம் அண்ட் சன்ஸ் பொம்மை வீட்டில், கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இம்மாதம், 4ம் தேதி துவங்கிய கண்காட்சி, மே, 31 வரை நடைபெற உள்ளது. இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட வித்தியாசமான விளையாட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.சதுரங்கம், பல்லாங்குழி உட்பட, பாரம்பரிய விளையாட்டுகளை இங்கு காணலாம். ஆர்வம் உள்ளவர்கள் விளையாட்டில் பங்கேற்கலாம். சதுரங்க விளையாட்டு பலகை, மரத்தால் செய்யப்படவில்லை. லம்பானி வேலைப்பாடுகள் உடைய துணியால் அற்புதமாக செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுக்கான காய்கள் சென்னப்பட்டணா மர பொம்மைகளாகும்.இந்த காலத்து விளையாட்டுக்கு, பழமையான கலை வடிவம் அளிக்கப்பட்டுள்ளது. மூளையை அதிகமாக பயன்படுத்தும் விளையாட்டுகளில், சிறார்கள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.அந்த காலத்தில் அரச குடும்பத்தினர், யானை தந்தம், சந்தனம் மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட சதுரங்க பலகைகளை பயன்படுத்தினர். இந்த பாரம்பரியத்தை நினைவூட்டும் ஜெய்ப்பூர், வாரணாசி, மைசூரு பாணியில் மிகவும் அபூர்வமான சதுரங்க பலகைகள், காய்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.கோடை விடுமுறையில், சிறார்களுக்கு நமது பாரம்பரிய விளையாட்டுகளை அறிமுகம் செய்யவும், விளையாடி மகிழவும் இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்காது.எனவே குழந்தைகள், குடும்பத்துடன் கண்காட்சிக்கு செல்லலாம். இதை காண கட்டணம் ஏதும் இல்லை. அனுமதி இலவசம்.