பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கும் சத்துணவு வழங்குமாறு வலியுறுத்தல்
சென்னை: தமிழக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ மாணவியருக்கு, சத்துணவு வழங்குவது குறித்து, ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என, சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 4.50 லட்சம்; அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3.50 லட்சம் என, மொத்தம், 8 லட்சம் மாணவ மாணவியர் மேல்நிலை வகுப்புகளில் படிக்கின்றனர். அவர்களில் பலர், தங்களின் குடும்ப சூழல் காரணமாக, மதிய உணவு எடுத்து வருவதில்லை.அவர்கள் பசியுடனே இருக்கின்றனர். இது குறித்து ஆய்வு செய்த, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற கழகம், பிளஸ் 2 வரை மதிய உணவு திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும் என, முதல்வர் விஜய்க்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளது.இது குறித்து, அதன் தலைவர் மணிகண்டன் கூறுகையில், “மாணவர்கள், பசியோடு இருப்பதை பார்ப்பது கொடுமையாக உள்ளது. தற்போதைய விலைவாசியின்படி, ஒரு மாணவருக்கு, 15 ரூபாய் செலவில், மதிய உணவு வழங்க முடியும். அந்த வகையில், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் சத்துணவு வழங்க, 264 கோடி ரூபாய் தான் தேவைப்படும். இது குறித்து, முதல்வருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்,” என்றார்.இது குறித்து, சமூக நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சத்துணவு திட்டத்தை விரிவுப்படுத்துவது, அரசின் கொள்கை முடிவு. அதே சமயம், மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் விருப்பத்தை அறிய, ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம். ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், அறிக்கை தயாரித்து, அரசிடம் அளிப்போம்' என்றனர்.