புத்தகத் திருவிழாவில் 100 அரங்குகள் அமைப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ராஜா பள்ளி மைதானத்தில் புத்தக திருவிழா பிப். 2 முதல் 12 வரை நடக்கிறது. இதில் 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் புத்தகங்கள் இடம்பெற உள்ளதாக கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.நேற்று ராமநாதபுரம் ராஜா பள்ளி மைதானத்தில் புத்தகத் திருவிழாவிற்கான பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்து கூறியதாவது:மாவட்டத்தில் 6வது புத்தகத் திருவிழா ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்.2 முதல் 12 வரை நடக்கிறது. இதில் முன்னணி புத்தக பதிப்பகங்கள் கலந்து கொண்டு புத்தகக் கண்காட்சி அரங்குகள் இடம்பெற உள்ளன. இங்கு 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகிறது.மேலும் ஓவியக் கண்காட்சி, மூலிகைக் கண்காட்சி மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், பட்டிமன்றம் நடைபெறவுள்ளது. மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்றார்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரபாகரன், வட்டார போக்குவரத்து அலுவலர் ஷேக் முகமது, கலை இலக்கிய ஆர்வலர் சங்க செயலாளர் வான்தமிழ் இளம்பரிதி, ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார், வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் பங்கேற்றனர்.