உள்ளூர் செய்திகள்

இன்ஜி., கவுன்சிலிங்: 42 கல்லூரிகளில் சேர ஆர்வமில்லை

தமிழகத்தில் தற்போது 427 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், 354 கல்லூரிகள் கடந்த ஆண்டே பொறியியல் கவுன்சிலிங்கில் இடம்பெற்றவை. ஐந்து அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், 68 தனியார் பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 73 கல்லூரிகள் இந்த ஆண்டு புதிதாக துவக்கப்பட்டவை. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கவுன்சிலிங், ஜூலை 10ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதில், ஒரு லட்சத்து 5,720 இடங்கள் உள்ளன. கடந்த 26ம் தேதி நிலவரப்படி, 167 ‘கட்-ஆப்’ மதிப்பெண் வரை பெற்ற, 50 ஆயிரத்து 932 மாணவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டனர். இதில், 11 ஆயிரத்து 247 மாணவர்கள் (22.08 சதவீதம்) கவுன்சிலிங்கிற்கு வரவில்லை. இதுவரை 39 ஆயிரத்து 528 மாணவர்களுக்கு கவுன்சிலிங்கில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், சிவில் பிரிவில் 3,317 பேர், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 5,649 பேர், இ.சி.இ., பிரிவில் 10 ஆயிரத்து 243 பேர், இ.இ.இ., பிரிவில் 5,249 பேர், தகவல் தொழில்நுட்பப் பிரிவில் 3,121 பேர், மெக்கானிக்கல் பிரிவில் 6,841 பேர் சேர்ந்துள்ளனர். பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் துவங்கி 17 நாட்கள் ஆன பிறகும், 42 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை. இந்த ஆண்டு புதிதாக துவக்கப்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகளில் தான் பெரும்பாலும் ஒரு இடம் கூட நிரம்பாமல் உள்ளன. மேலும் 177 கல்லூரிகளில் 10 சதவீதத்திற்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன. அதேநேரத்தில், முன்னணி கல்லூரிகளில் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன. கவுன்சிலிங்கில், 27 கல்லூரிகளில் 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பியுள்ளன. மேலும் எட்டு கல்லூரிகளில் 90 முதல் 95 சதவீதம் வரையிலான இடங்கள் நிரம்பி விட்டன. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங்கில், தகவல் தொழில்நுட்பப் பிரிவில் 197 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை. அதேபோல, கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 166 கல்லூரிகள், இ.சி.இ., பிரிவில் 54 கல்லூரிகள், இ.இ.இ., பிரிவில் 116 கல்லூரிகள், மெக்கானிக்கல் பிரிவில் 59 கல்லூரிகள், சிவில் பிரிவில் 42 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை. ‘ஆப்சென்ட்’ எண்ணிக்கை அதிகரிப்புகடந்த 26ம் தேதி 167 மதிப்பெண் வரை, ‘கட்-ஆப்’ மதிப்பெண் பெற்றவர்கள், கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டனர். கடந்த ஆண்டு கவுன்சிலிங்கில், 167 வரை, ‘கட்-ஆப்’ மதிப்பெண் பெற்ற 51 ஆயிரத்து 252 பேர் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டு, அதில் 9,753 பேர் (19 சதவீதம்) கவுன்சிலிங்கிற்கு வரவில்லை. இந்த ஆண்டு, 167 வரை, ‘கட்-ஆப்’ மதிப்பெண் பெற்ற 50 ஆயிரத்து 898 பேர் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டு, அதில் 11 ஆயிரத்து 211 பேர் (22 சதவீதம்) கவுன்சிலிங்கிற்கு வரவில்லை. இந்த ஆண்டு, 167 வரை, ‘கட்-ஆப்’ மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. ஆனால், கவுன்சிலிங்கிற்கு வராதவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3 சதவீதம் அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்