அரசு பள்ளியில் ரூ.49 லட்சத்தில் இரண்டு கூடுதல் வகுப்பறைகள்
சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே எரண்டப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில், 90 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.போதிய வகுப்பறைகள் இல்லாததால், தலைமையாசிரியர் கணபதி, டைட்டன் இன்ஜினியரிங் மற்றும் ஆட்டோமேஷன் (டீல்) நிறுவனத்திடம், கூடுதல் வகுப்பறை கட்டி கொடுக்க கோரிக்கை விடுத்தார். அதையேற்று, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமாரிடம் அனுமதி பெற்று, 'டீல்' நிறுவனம் தங்களது சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து, 49 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.இதையடுத்து, இரு கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியை, மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணா, 'டீல்' நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்ட தலைவர் பாஸ்கர் ஆகியோர், பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர். 'டீல்' நிறுவன மேலாளர் தணிகைவேல், பள்ளி துணை ஆய்வாளர் சுரேஷ்பாபு உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, 'டீல்' நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்ட அதிகாரி பிரபு செய்திருந்தார்.