தேர்வு யுக்தி
பத்து மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பிட்ட நேரம் நிர்ணயித்து படிப்பதுபுத்திசாலித்தனம். இதில் தங்களுக்கு கஷ்டமாக தோன்றும் பாடத்திற்கு கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும். பெரும்பாலானவர்கள் இதை செய்ய தவறுவதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பருவத்தேர்வு, காலாண்டு, அரையாண்டு, மாதிரித்தேர்வுகள் மற்றும் முந்தைய ஆண்டு பொதுத்தேர்வுகள் போன்ற எல்லா தேர்வுகளிலும் கேட்கப்பட்ட அனைத்து வினாக்களுக்கும் சரியான பதில்களை மாணவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். பள்ளியில் நடக்கும் சாதாரண தேர்வு உட்பட அனைத்து தேர்வையும் பொதுத்தேர்வாக நினைத்து படிப்பது நன்மை அளிக்கும். மொழி பாடங்களுக்கு முக்கியத்துவம் தர தேவையில்லை என அலட்சியமாக நினைப்பது ஒரு தவறான சிந்தனை. ஆங்கிலத்தில் கோட்டை விடுபவர்கள் அதிகம் பேர் என ஆசிரியர்கள் எடுத்துரைக்கின்றனர். எனவே மாணவர்கள் போதிய விழிப்புணர்வோடு திட்டமிட்டு செயல்பட வேண்டும். தாங்களே சுயமாக கால அட்டவணை நிர்ணயம் செய்து அதை சரியாக பின்பற்றி செயல்படுவது பொதுத்தேர்வில் ஜொலிக்க உதவும் என ஆசிரியர்கள் உறுதிபட கூறுகின்றனர்.