குரூப்-1 தேர்வில் மனித நேயம் கல்வி மைய மாணவர்கள் சாதனை
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) 61 இடங்களுக்கு நடத்திய குரூப்-1 தேர்வில், 50 இடங்களைப் பிடித்து, மனிதநேய கல்வி மைய மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். துணை கலெக்டர், டி.எஸ்.பி., ஊரக வளர்ச்சித்துறை துணை இயக்குனர் உட்பட, பல்வேறு பணிகளுக்கு, 61 பேரை தேர்வு செய்ய, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வை நடத்தியது. முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வுக்குப் பின், சமீபத்தில் நேர்முகத் தேர்வு நடந்தது. அதைத்தொடர்ந்து, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மொத்தம் உள்ள, 61 பணியிடங்களில், சைதை துரைசாமியின் மனிதநேயம் இலவச கல்வி மையத்தில் படித்த மாணவர்கள், 50 இடங்களைப் பிடித்து, சாதனை படைத்துள்ளனர். இது குறித்து, மையத்தின் தலைமை பயிற்சியாளர் சாம் ராஜேஸ்வரன் கூறியதாவது: வெற்றி பெற்ற, 50 பேரில், துணை கலெக்டர் பதவிக்கு, 11 பேர், டி.எஸ்.பி., பதவிக்கு நான்கு பேர், கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் பதவிக்கு, 20 பேர், பஞ்சாயத்து துணை இயக்குனர் பதவிக்கு, 15 பேர் தேர்வாகியுள்ளனர். 50 பேரில், 24 பேர் மாணவியர்; 26 பேர் மாணவர்கள். இவ்வாறு ராஜேஸ்வரன் கூறியுள்ளார்.