உள்ளூர் செய்திகள்

தமிழில் 100 மதிப்பெண் பெற மாணவர்களுக்கு உரிய பயிற்சி

சிவகங்கை: அரசு பொதுத்தேர்வில் மாணவர்கள் தமிழ்பாடத்தில் 100 மதிப்பெண் பெறுவதற்கு முறையான பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று மீளாய்வுக் கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி பேசினார்.சிவகங்கை மாவட்டம் பள்ளி கல்வித்துறை சார்பில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான மீளாய்வுக் கூட்டம் மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் நடந்தது. முதன்மைக் கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமை வகித்தார். அரையாண்டுத் தேர்வு, முதல் திருப்புதல் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண், கடந்த ஆண்டு பள்ளிகள் பெற்ற தேர்ச்சி விழுக்காடு குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி பேசுகையில், 2025ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிவகங்கை மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பெற்றது. அதை போன்று இந்த ஆண்டும் பொதுத்தேர்வில் முதலிடத்தை பெறுவதற்கு மாணவர்களுக்கு கற்பித்தல், தேர்வு முறைகள் உள்ளிட்ட பயிற்சியளிக்கவும், சராசரி மதிப்பெண்களை உயர்த்துவதற்கும், தமிழ்பாடத்தில் 100 மதிப்பெண் பெறுவதற்கும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.தமிழ்ப் பாடம் போட்டித் தேர்வுகளுக்கு மிக பயனுள்ள வகையில் அமைந்துள்ளது என்றார். மாவட்ட கல்வி அலுவலர் மாரிமுத்து, மெட்ரிக் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் வடிவேலு, தமிழ்பாட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரி, பள்ளிக் கல்வி ஆய்வாளர்கள் ஆனந்தன், ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்