மாணவியருக்கு 15 நாள் தொழிற்சார்ந்த பயிற்சி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், அரசு மற்றும் தனியார் கல்லுாரி மாணவியருக்கு, 15 நாள் தொழில் சார்ந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.முதல் கட்ட பயிற்சி, கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லுாரியில் இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு பயிலும், 120 மாணவியருக்கு, அருங்காட்சியகம் தொடர்பான பயிற்சி கடந்த, 11 முதல் துவங்கியது. இதில் ஒரு பகுதியாக, மாணவியர் பழந்தமிழ் எழுத்துக்களை எழுதவும், படிக்கவும் அறிந்து கொள்ள தமிழக தொன்மை இயல் ஆய்வு நிறுவன செயலர் கோவிந்தராஜ், சங்க இலக்கியங்கள் எந்த எழுத்துகளில் எழுதப்பட்டது. அந்த எழுத்துகளின் வளர்ச்சி தொடர்பாக மாணவியருக்கு எடுத்துரைத்தார்.தமிழ் எழுத்துகளின் ஆரம்ப வடிவமான குறியீடுகள் மற்றும் தமிழி எழுத்துகளை குறிப்பிட்டு எழுதும் முறைகள் பற்றி பயிற்றுவித்தார். பயிற்சியில் பங்கேற்ற மாணவியர் தங்கள் பெயர்களை, 2,500 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய தமிழி எழுத்துகளில் எழுதி காண்பித்தனர். அருங்காட்சியகவியல் தொடர்பாக காப்பாட்சியர் சிவகுமார் பயிற்றுவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இது வரை கண்டுபிடித்துள்ள கல்வெட்டுகள் குறித்த விவரங்களை வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணக்குழு செயலர் தமிழ்செல்வன் விவரித்தார். கள ஆய்வு விபரங்களை ஆவணப்படுத்துதல் குறித்து மனோகரன் எடுத்துரைத்தார். வரும் நாட்களில் சுற்றுலா தொடர்பான பயிற்சியை, மாவட்ட சுற்றுலா அலுவலர் கார்த்திக் வழங்கினார்.