குரூப்-2 தேர்வு திட்டமிட்டபடி ஜுலை 30ல் நடைபெறும்
சென்னை தலைமைச் செயலகத்தில் பல்வேறு விதமான சார்நிலை பணிகளுக்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-2 தேர்வை நடத்துகிறது. இந்த ஆண்டு 4,329 காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. அதன்படி. எழுத்துத்தேர்வு ஜுலை 3-ந்தேதி நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. குருப்-2 தேர்வுக்கு 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்தனர் இந்த நிலையில், தேர்வு தேதி ஜுலை 30-ந் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல், புதிதாக தலைமைச்செயலக உதவி பிரிவு அதிகாரி, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையில் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் 2,365 காலி இடங்கள் சேர்க்கப்பட்டு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. புதியவர்கள் விண்ணப்பிக்க ஜுன் மாதம் 21-ந் தேதி வரை கால அவகாசமும் கொடுக்கப்பட்டது. புதிய அறிவிப்பை தொடர்ந்து காலி இடங்களின் எண்ணிக்கை 6,695 ஆக உயர்ந்தது. இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான காலி இடங்கள் இதற்கு முன்பு டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வந்தது கிடையாது. இதனால், முன்பு விண்ணப்பிக்க தவறிய பட்டதாரிகள் கடைசி வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பித்தனர். கால அவகாசம் வழங்கப்பட்ட 10 நாளில் மட்டும் 80 லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக, குரூப்-2 தேர்வு தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட இருப்பதாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் மத்தியில் தகவல் பரவியது. இந்த நிலையில், குரூப்-2 தேர்வு திட்டமிட்டபடி ஜுலை 30-ந்தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி அனில் மேஷ்ராம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஒருங்கிணைந்த சார்நிலை பணிகள் தேர்வு என்று அழைக்கப்படும் குரூப்-2 தேர்வு தமிழகம் முழுவதும் 104 மையங்களில் ஜுலை மாதம் 30-ந்தேதி (சனிக்கிழமை) காலை நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருந்தது. அதன்படி, ஜுலை 30-ந் தேதி அன்று திட்டமிட்டபடி, குரூப்-2 தேர்வு நடைபெறும். இதுதொடர்பாக வரும் தவறான செய்திகளை விண்ணப்பதாரர்கள் நம்ப வேண்டாம் என்று அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அனில்மேஷ்ராம் கூறி உள்ளார்.