பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வெழுத, 11 ஆயிரத்து 930 மாணவர், 14 ஆயிரத்து 478 மாணவியர், 141 தனித்தேர்வர்கள் என மொத்தம், 26 ஆயிரத்து 852 பேருக்கு தேர்வெழுத 'ஹால் டிக்கெட்' வழங்கப்பட்டிருந்தது.நேற்று காலை, 09:00 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் மாணவ, மாணவியர் வந்தனர். காலை, 10:00 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்ட நிலையில், 15 நிமிடம் முழுமையாக படித்து, 10:15 முதல் தேர்வர்கள் தேர்வெழுத துவங்கினர்.மதியம், 01:15 மணி வரை தேர்வு நடந்தது. தமிழ் தேர்வெழுத, 25 ஆயிரத்து 892 மாணவ, மாணவியர் தகுதியான நிலையில், 25 ஆயிரத்து, 647 பேர் தேர்வெழுதினர். 245 பேர் தேர்வுக்கு வரவில்லை. பிரெஞ்சு தேர்வை, 507 பேரும், இந்தி தேர்வை, இரண்டு பேரும் எழுதினர். வரும், 5ம் தேதி ஆங்கிலத் தேர்வு நடக்கிறது. மார்ச் 26ம் தேதியுடன் தேர்வுகள் நிறைவு பெறுகிறது.ஊக்கப்படுத்த வேண்டும் பொதுத்தேர்வுக்கு முன்பாக, திருப்பூர் மாவட்டத்துக்கான தேர்வு நடத்தும் பொறுப்பு அலுவலர், தனியார் பள்ளிகள் இணை இயக்குனர் கணேச மூர்த்தி வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் திடீர் ஆய்வு நடத்தினார். ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகளை சி.இ.ஓ., புனிதா அந்தோணியம்மாள் பார்வையிட்டார்.'தேர்வின் போது மாணவ, மாணவியரின் உற்ற துணையாக பெற்றோர் இருக்க வேண்டும்; தேர்வுக்கு முதல் நாள், தேர்வு நாளில் அவர்களை தயார்படுத்துவது, நன்றாக படித்து தயாராக ஊக்கப்படுத்த வேண்டும். படிக்கும் அனைவரும் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். அதற்கேற்ப, கல்வியில் பின்தங்கிய மாணவ, மாணவியருக்கும் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது,' என்றார்.