வரும் 25ம் தேதி முதல் மாணவர்களுக்கு இலவச லேப் டாப்: முதல்வர் அறிவிப்பு
புதுச்சேரி: வரும் 25ம் தேதி முதல் மாணவர்களுக்கான இலவச லேப்டாப் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையையொட்டி கதிர்காமம் தொகுதியில் மகளிர்களுக்கான கோலப்போட்டி நடத்தப்பட்டது. விழாவில், முதல்வர் ரங்கசாமி, தொகுதி எம்.எல்.ஏ., ரமேஷ், அரசு கொறடா ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மகளிர்களுக்கு பல்வேறு பரிசுகளை வழங்கினர்.விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசுகையில், புதுச்சேரி அரசு அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. தற்போது சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரிசிக்கான பணத்தை பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்துவதால் , ரேஷன் கடைகளை திறக்க முடியாத நிலை உள்ளது.மேலும் பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.500 வழங்கப்பட்ட நிலையில் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு கூடுதலாக ரூ.250 பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. அரசு அறிவித்தபடி, பள்ளி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் வழங்கும் பணி வரும் 25ம் தேதி முதல் துவக்கப்படும் என்றார்.