வரும் 28ல் நடக்கவிருந்த க்யூட் தேர்வு ஒத்திவைப்பு
புதுடில்லி: மத்திய பல்கலைகளில் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கான, 'க்யூட்' நுழைவுத் தேர்வு, வரும் 28ம் தேதி நடக்கவிருந்த நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.நாடு முழுதும் உள்ள மத்திய பல்கலைகள் மற்றும் அவற்றின் கீழ் இயங்கும் கல்லுாரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர 'க்யூட்' எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.கடந்த 2022ம் ஆண்டு முதல் நடத்தப்படும் இந்த தேர்வை என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்தாண்டுக்கான முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு கடந்த மார்ச்சில் நடந்தது.இளநிலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கான 'க்யூட்' தேர்வு, கடந்த 11ம் தேதி முதல் நடந்து வருகிறது. பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப நடத்தப்பட்டு வரும் இந்த நுழைவுத் தேர்வு, வரும் 31ம் தேதி வரை நடத்தப்படுகிறது.ஒரு சில படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு வரும் 28ம் தேதி நடத்தப்படும் என தேர்வு முகமை அறிவித்திருந்தது. இந்நிலையில், அன்றைய தினத்துக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இது குறித்து என்.டி.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வரும் 28ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால், அன்றைய தினத்துக்கான காலை - மாலை என இருவேளைகளிலும் நடத்தப்பட இருந்த க்யூட் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது.மறுதேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். தேர்வு தொடர்பான மேலும் விபரங்களுக்கு https://cuet.nta.nic.in என்ற இணையதளத்தை அணுகவும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.